*நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பம்ப் ஷெட் மூலம் கோடை நெல் சாகுபடி தொடங்கியுள்ளது. நடவு பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, கோடை என முப்போக நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டால் குறுவை, சம்பா சாகுபடியில் பெரிதளவில் மகசூல் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது நிலத்தடி நீரை கொண்டு கோடை சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளது. இதில் நாற்று நடும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் ஒரத்தநாடு அருகே, மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தா மாவட்டம்,கொலிக்ராம் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோடை நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் ஊரிலும் விவசாயம் தான் செய்வோம் ஆனால் அங்கு பெரிதளவில் வேலையும் இல்லை, ஊதியமும் கிடைக்கவில்லை.
எங்கள் ஊரில் கிடைக்கும் கூலியை விட இங்கு அதிக கூலி கிடைக்கிறது. ஒவ்வொரு சாகுபடி காலத்திலும் ஏஜென்ட் மூலம் நாங்கள் தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நடவு பணிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறோம். இங்கு வேலை செய்யும் அனைவரும் எங்கள் ஊர்காரர்கள் மற்றும் உறவினர்களே. தங்குவதற்கு உணவு ஏற்பாடுகள் எல்லாம் நில உரிமையாளர்கள் செய்து தருகின்றனர். மேலும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் உதவுகின்றனர் என்றனர்.
The post தஞ்சாவூரில் பம்ப் செட் மூலம் கோடை நெல் சாகுபடி appeared first on Dinakaran.