×

மாமல்லபுரம் பட்டதாரியை மணந்து சிற்பியாக மாறிய பிரான்ஸ் நாட்டு பெண்

 

சென்னை, மார்ச் 11: மாமல்லபுரம் சிற்பக்கலையை ரசித்து, அங்குள்ள சிற்பியை மணந்த பிரான்ஸ் நாட்டு பெண், தானும் ஒரு சிற்பக்கலைஞராக மாறி, பிரான்ஸ் நாட்டு சீர்திருத்தவாதி மற்றும் பெண் மதகுருவின் உருவ சிற்பத்தை இந்திய கலை பாணியில் வடித்து அசத்தி உள்ளார். மாமல்லபுரம் மீனவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (49). இவர், மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லூரியில் கற்சிற்ப பிரிவில் பயின்று பட்டம் பெற்ற சிற்பக்கலைஞர்.

கடந்த, 2004ம் ஆண்டு மாமல்லபுரம் சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு பெண் கேப்ரியேல், மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்து ரதம் சிற்பங்களை சுற்றிப் பார்த்து வியந்துள்ளார். பின்னர், இந்திய சிற்பக்கலையை கற்றுக்கொள்ள விரும்பி சிற்பி சீனிவாசனிடம் சிற்பக்கலை பயிற்சி பெற்றார். பிறகு, சிற்பக்கலையின் மீது உள்ள ஈர்ப்பு மற்றும் ஆர்வம் காரணமாக மாமல்லபுரம் சிற்பி சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார்.

பிரான்ஸ் நாட்டு பெண் கேப்ரியேலுடன், சீனிவாசனும் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று அங்கும் தனது சிற்பக்கலை தொழிலை தொடர்ந்தார்.  அவருடன், கேப்ரியேலும் முழு நேர சிற்பம் செதுக்கும் பணியில் ஈடுபட்டு, தற்போது சிறந்த சிற்பக்கலைஞராக மாறி, சிற்பம் செதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். வருடத்திற்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பிரான்சிலிருந்து மாமல்லபுரம் வரும் சீனிவாசன் – கேப்ரியேல் தம்பதியினர், இங்கு இரண்டு மாதங்கள் வரை சிற்பம் செதுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக, தனது கணவர் சீனிவாசனிடம் சிற்பம் செதுக்க கற்றுக்கொண்ட கேப்ரியேல் ஒரு திறமை வாய்ந்த பெண் சிற்பியாக மாறி, பல்வேறு சாமி சிலைகளையும், மாடர்ன் ஆர்ட் சிற்பங்களையும் அழகுர வடிவமைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். தற்போது, தான் வடித்த சிற்பங்களை பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரத்தில் கண்காட்சியும் அமைத்து அசத்தி வருகிறார்.

மேலும், அவர் வடித்துள்ள 30 கற்சிற்பங்களை கொண்டு புத்தகமும் வெளியிட்டுள்ளார். தற்போது, மாமல்லபுரம் வந்துள்ள சிற்பக்கலைஞர் கேப்ரியேல், ஆண் கலைஞர்கள் போல் தரையில் அமர்ந்து உளி, சுத்தியல் மூலம் சிற்பம் செதுக்குகிறார். அவருக்கு, சிற்பங்களிள் நுணுக்கங்களை அவ்வப்போது சீனிவாசனும் அருகில் இருந்து சொல்லி கொடுக்கிறார்.

கேப்ரியேல், பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரத்திற்கு அருகில் உள்ள ரேன் பகுதியில் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த சமூக சேவகியும், அந்நாட்டு சீர்திருத்தவாதியுமான பெண் மதகுரு தெரேசா பான்து என்பவரின் உருவ சிலையை தத்ரூபமாக கடப்பா கல்லில் வடிவமைத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாமல்லபுரம் பட்டதாரியை மணந்து சிற்பியாக மாறிய பிரான்ஸ் நாட்டு பெண் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Chennai ,
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...