×

மேலூர் அருகே செக்யூரிட்டி கொலையில் 2 வாலிபர்கள் கைது: முன்னதாக உறவினர்கள் சாலை மறியல்

 

மேலூர், மார்ச் 5: மேலூர் அருகே சாலையில் அமர்ந்து மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட செக்கியூரிட்டியை 3 பேர் வெட்டிக்கொன்றனர். இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக குற்றவளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலூர் அருகே கீழையூரை சேர்ந்த ஜெகநாதன் மகன் லட்சுமி நாராயணன்(48). சென்னையில் தனியார் நிறுவன செக்கியூரிட்டியாக இருந்து வந்தார்.

விடுமுறையில் கீழையூருக்கு வந்த இவர், 2 நாட்களுக்கு முன் அவரது விவசாய நிலத்திற்கு சென்றார். அவருடன் நண்பர்கள் செந்தில்குமார், ஹரிராமன் ஆகியோரும் இருந்தனர். அங்கிருந்து அவர்கள் திரும்பி வந்தபோது, கீழையூர் அருகே சாலையில் அமர்ந்து 3 பேர் மது அருந்தியுள்ளனர். இதனை லட்சுமி நராயணன் தட்டி கேட்டுளளார். ஆத்திரமடைந்த அவர்கள் லட்சுமி நாராயணனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். இதனைத்தொடர்ந்து, கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி, நேற்று அவரது உறவினர்கள் மேலூர் – திருப்பத்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கீழவளவு போலீசார் சமாதானம் செய்து கலைத்தனர்.

இந்நிலையில் மேலூர் அருகே பனங்காடியை சேர்ந்த நிகாஷ்(21), சுக்காம்பட்டியை சேர்ந்த தனுஷ்(20) என 2 பேரை கீழவளவு போலீசார் இக்கொலை தொடர்பாக நேற்று மாலை கைது செய்தனர். இவர்கள் வழிப்பறியில் ஈடுபடுவதற்காக அப்பகுதிக்கு வந்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களுடன் இருந்த மற்றொருவர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post மேலூர் அருகே செக்யூரிட்டி கொலையில் 2 வாலிபர்கள் கைது: முன்னதாக உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Melur ,Dinakaran ,
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!