×

நான் எம்ஜிஆர் ரசிகன், ஆனால் கலைஞரின் பக்தன் திராவிடம் என்ன என்று கேட்பவர்களுக்கு கலைஞர் நினைவிடத்தில் பதில் உள்ளது: நடிகர் வடிவேலு புகழாரம்

பெரம்பூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா என்ற தலைப்பில், தினசரி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, 38வது நிகழ்வாக ‘கணந்தோறும் மக்கள் சிந்தனை காலத்தை கடந்த சாதனை’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம், கொளத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், கொளத்தூரில் நேற்று முன்தினம் மாலை நடந்தது.

பகுதி செயலாளர் ஐசிஎப் முரளிதரன் தலைமை வகித்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில், திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் வடிவேலு, முனைவர் பர்வின் சுல்தான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.  நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், ‘‘திமுக வளர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைப்பு அளப்பரியது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி மக்கள் வெற்றிகளை திமுகவிற்கு பெற்று தர வேண்டும்,’’ என்றார்.

முனைவர் பர்வீன் சுல்தானா பேசுகையில், ‘‘காலம் நமக்கு தந்த பெட்டகம் தான் நம் தளபதி. இந்த நூற்றாண்டில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த மாமன்னன் முதல்வர் ஸ்டாலின் தான். தனிமனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் கனவை நனவாக்கும் நோக்கில் காலை உணவு தந்த தலைவன் நம் முதல்வர் ஸ்டாலின்’’ என்றார்.

நடிகர் வடிவேலு பேசுகையில், ‘‘தனது கடின உழைப்பால் முதல்வர் பதவிக்கு வந்தவர் மு.க.ஸ்டாலின். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகின்றார். விளையாட்டுத்துறையில் இருந்தாலும் அலார்ட்டான அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார். எம்ஜிஆர் ரசிகன் நான். ஆனால் கலைஞரின் பக்தன் நான். திராவிடம் என்று கேட்பவர்களுக்கு சொல்கின்றேன்.

கலைஞர் நினைவிடத்தில் உள்ள வாழ்க்கை வரலாறுகளை பார்த்தால் புரியும்,’’ என்றார். நிகழ்வில் கலாநிதி வீராசாமி எம்பி, மேயர் பிரியா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார், பகுதி செயலாளர் நாகராசன், மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

* மண்டபம் அல்ல சன்னதி
நடிகர் வடிவேலு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்க்கும் போது ஆச்சர்யமாக உள்ளது. 1.30 மணி நேரம் சுற்றி பார்த்தேன். கலைஞரின் கடின உழைப்பும், ஒரு தனிமனிதனின் தியாக வரலாறும் தெரிகிறது. அங்கு அமைக்கப்பட்டிருப்பது கலைஞர் மணிமண்டபம் மட்டும் அல்ல அது ஒரு மகா சன்னதி. தமிழக மக்கள் அனைவரும் கலைஞர் நினைவிடத்தை பார்வையிட வேண்டும்,’’ என்றார்.

The post நான் எம்ஜிஆர் ரசிகன், ஆனால் கலைஞரின் பக்தன் திராவிடம் என்ன என்று கேட்பவர்களுக்கு கலைஞர் நினைவிடத்தில் பதில் உள்ளது: நடிகர் வடிவேலு புகழாரம் appeared first on Dinakaran.

Tags : MGR ,Dravid ,Vadivelu ,Perambur ,Chief Minister ,M.K.Stal ,Chennai East District DMK ,People's Chief Minister's Humanity Festival ,Dravi ,Vadivelu Pugaharam ,
× RELATED கடலூரில் கோஷ்டி பூசல் காரணமாக ஒரே...