×

சென்னையில் கடந்த 3 நாட்களாக டெல்லி, மும்பை விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி

 

மீனம்பாக்கம், மார்ச் 4: சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று காலை 10.30 மணிக்கு, டெல்லியில் இருந்து சென்னை வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மற்றும் நேற்று இரவு 7.50 மணிக்கு, மும்பையில் இருந்து சென்னை வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய 2 வருகை விமானங்களும், சென்னையில் இருந்து காலை 11.15 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 8.30 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 புறப்பாடு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

இந்த நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்று, விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு எதுவும் கொடுக்கவில்லை. இது பற்றி விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவன வட்டாரத்தில் விசாரித்தபோது, நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதால், அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறுகின்றனர். இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமையும், டெல்லி, மும்பை விஸ்தாரா ஏர்லைனஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் மும்பை விமானம் ரத்து செய்யப்பட்டது. கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், குறிப்பாக மும்பை, டெல்லி விமானங்கள் ரத்தாகி வருவதால், சென்னையில் இருந்து மும்பை டெல்லி செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

The post சென்னையில் கடந்த 3 நாட்களாக டெல்லி, மும்பை விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Delhi, Mumbai ,Chennai ,Meenambakkam ,Vistara Airlines ,Delhi ,Chennai Domestic Airport ,Vistara ,Mumbai ,Dinakaran ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்