×

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்குள் அரிவாளுடன் நுழைந்த இளைஞரால் பரபரப்பு

புதுக்கோட்டை, மார்ச்3:புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயில் கருவறையில் இளைஞர் ஒருவர் அரிவாளுடன் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் அவரை வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டபோது அந்த இளைஞர் கையில் வைத்திருந்த அரிவாளை காட்டி காவல்துறையினரை மிரட்டியுள்ளார். இதனை அடுத்து அச்சமடைந்த காவல்துறையினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் காவல்துறையினரோடு இணைந்து கோயில் கருவறையில் அரிவாளுடன் இருந்த இளைஞரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் இந்த தகவல் பரவியதால் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை காவல்துறையினர் கலைந்து போக சொல்லிவிட்டு தீயணைப்புத்துறையினருடன் இணைந்து கோயில் கருவறைக்குள்ளே சென்று அரிவாளுடன் இருந்த இளைஞரை மீட்க முயற்சி செய்தபோது அந்த இளைஞர் கையில் வைத்திருந்த அரிவாளை வைத்து உள்ளே செல்ல முயல்பவர்களை வெட்ட முயற்சி செய்ததால் பதட்டமான சூழல் நிலவியது.

இதன் பிறகு காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போது அந்த இளைஞர் புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட அசோக் நகரை சேர்ந்த உமாபதி பூங்கோதை என்ற தம்பதியின் மகன் வினோத் (31) என்பது தெரியவந்தது. மேலும் சம்பந்தப்பட்ட இளைஞர் அவர் கையில் வைத்திருந்த மொபைல் போனில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்திருந்ததால் காதல் விவகாரம் என்று காவல்துறையினர் எண்ணினர்.

பின்னர் அரசு மனநல மருத்துவர் வரவழைத்து அந்த இளைஞருக்கு மனநல ஆலோசனையும் வழங்கிய நிலையிலும் அந்த இளைஞர் வெளியே வர மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து இளைஞரை வெளியே கொண்டு வர தீயணைப்புத் துறையினர் வாகனம் மூலம் தண்ணீர் பீச்சி அடித்த நிலையில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரை பணயம் வைத்து உடனடியாக உள்ளே சென்று அந்த இளைஞர் கையில் வைத்திருந்த அரிவாளை பறித்து வர பின்னர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் அந்த இளைஞரை வலை போட்டு பிடித்தனர்.

பின்னர் அந்த இளைஞரை கோயில் கருவறைக்குள் இருந்து வெளியே கொண்டு வந்து கை கால்களை கட்டி ஆட்டோ மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் புதுக்கோட்டை நகர காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை செய்தபோது சம்பந்தப்பட்ட இளைஞர் வினோத் மன உளைச்சலில் இருந்ததாகவும் இந்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு அவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து அந்த பெண்ணை நிச்சயிக்கப்பட்ட நிலையில் திடீரென்று மனநிலை பாதித்தவர் போல் மாறியதால் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்வதற்காக அவரது பெற்றோர் அவரை அழைத்து வந்த போது இந்த சம்பவம் நடந்ததாகவும் மேலும் அந்த இளைஞர் கையில் வைத்திருந்த பெண்ணின் புகைப்படம் அவருக்கு நிச்சயம் செய்த பெண்ணின் புகைப்படம் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் அந்த இளைஞர் மீது எந்த வழக்கு பதிவும் செய்யாமல் உரிய மருத்துவம் பார்க்க வினோத்தின் பெற்றோரை அறிவுறுத்தி புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவமனையில் வைத்து வினோத்தை ஒப்படைத்தனர்.
தற்போது அங்கு வினோத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் புதுக்கோட்டை நகரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்குள் அரிவாளுடன் நுழைந்த இளைஞரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Anjaneyar Temple ,Jayaveera Anjaneyar temple ,Anjaneyar ,temple ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் தமிழ்...