×

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

 

விருதுநகர், மார்ச் 2: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: தமிழகம் முழுவதும் நாளை 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 1,56,830 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள், கோவில்கள் என 1,137 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். ஏற்கனவே முறையான தவணைகளில் சொட்டு மருந்து வழங்கியிருந்தாலும், முகாமில் சொட்டு மருந்து தவறாமல் வழங்க வேண்டும். லேசான காய்ச்சல், சளி, இருமல், வயிற்று போக்கு இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம். முகாமில் சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் என 4,548 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். 25 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு, இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள், தற்காலிக குடியிருப்புகளில் சொட்டுமருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 நடமாடும் குழுக்கள் ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், சோதனை சாவடிகள், கோயில் திருவிழாக்கள், திருமண விழாக்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். நடப்பாண்டில் ஒரே தவணையாக மார்ச் 3ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் தவறாமல் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் appeared first on Dinakaran.

Tags : Polio Drip Camp ,Virudhunagar ,Collector ,Jayaseelan ,Tamil Nadu ,Virudhunagar district ,Polio ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...