பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயிலில் பயணிக்க விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் விளக்கம் அளிக்க மெட்ரோ நிர்வாகத்துக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெங்களூருவில் அழுக்கு உடையுடனும், தலையில் சுமையுடனும் ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்ற விவசாயிக்கு அவரது உடையை காரணம் காட்டி மெட்ரோ பாதுகாப்பு ஊழியர்கள் அனுமதி மறுத்தனர். இதை பார்த்த சகபயணிகள் மெட்ரோ ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விவசாயிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததாக தெரிகிறது. இது குறித்த காணொளி இணையத்தில் வைரலான நிலையில் ரயில் பாதுகாப்பு பொறுப்பாளரை உடனடியாக மெட்ரோ நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் பி.எம்.ஆர்.சி.எல்-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஊடகங்களில் வெளியான செய்தி உண்மை என்றால் அது மனித உரிமை மீறல் என்றும், ஒரு நபர் அணிந்துள்ள உடையை வைத்து பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய அனுமதி மறுக்கக்கூடாது என்றும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அபாய பொருட்களை கொண்டு வந்தால் தடுக்கலாம் எனவும், நடந்த சம்பவம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மெட்ரோ நிர்வாகம் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
The post விவசாயிக்கு மெட்ரோ ரயிலில் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்.. மெட்ரோ நிர்வாகத்துக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.!! appeared first on Dinakaran.