×

குன்னூரில் 1.8 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு

ஊட்டி, பிப்.29: மைசூரில் இருந்து குன்னூருக்கு கடந்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 1800 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதியன்று காவலதுறையினர் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது மைசூரில் இருந்து குன்னூருக்கு வந்த லாரியை சோதனை செய்த போது தேங்காய் நார்களுக்கு இடையே குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதில் பல லட்சம் மதிப்புள்ள 1792 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக குன்னூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த டிரைவர் ராஜூ, சுரேஷ் மற்றும் குருராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் கனகராஜ், கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் குன்னூர் ஓட்டுபட்டறை பகுதியில் உள்ள நகராட்சி குப்பை மேலாண்மை மையத்தில் உள்ள ஹை டெம்ப்ரேச்சர் குளோஸ்ட் பர்னிங் எனப்படும் எரியூட்டும் இயந்திரத்தில் 75 மூட்ைட புகையிலை பொருட்களும் தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டது. காவல்துறையினர் கூறுகையில், ‘‘கடந்த 2021ம் ஆண்டு மைசூரில் இருந்து கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவு படி அழிக்கப்பட்டது. தமிழகத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவது, விற்பனை செய்வது குற்றமாகும். எனவே இதுபோன்ற நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

The post குன்னூரில் 1.8 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Ooty ,Mysore ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவி கர்ப்பம் ஆசிரியர் மீது வழக்கு