×

முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் ஜெயவிளங்கியம்மன் கோயில் மாசி திருவிழா

திருமயம். பிப்.29: அரிமளத்தில் நடைபெற்ற மாசி திருவிழாவில் திரளான பெண்கள் கலந்த கொண்டு மது பானை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று நேர்த்திகடன் செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஜெயவிளங்கியம்மன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாகும். இந்நிலையில் நடப்பு ஆண்டு மாசி திருவிழா கடந்த மாதம் 12ம் தேதி பூச்சொரிதல் விழா, 16ம் தேதி அம்மாக்களை அழைத்தல், 19ம் தேதி காப்புகட்டுதலுடன் முதல் நாள் திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.

இதனை தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு சமுதாயத்தினரின் மண்டகபடியொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனிடையே நேற்று முன்தினம் விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேர்த்திருவிழாவும், நேற்று மது எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் 16 நாட்கள் விரதம் இருந்து கோயில் மது வீட்டில் வைத்து சில்வர், பித்தளை பாத்திரங்களில் தென்னைபாலைகளால் அலங்கரித்த மது குடங்களை எடுத்து கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு ஊர்வலமாக வந்து ஜெயவிளங்கி அம்மன் கோயிலில் வைத்து விட்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற மது விழாவில் பெண்கள் கோவிலில் வைத்த மதுகுடங்களை பலூன், மலர்கள், கலர் பேப்பர்களால் அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்து சென்று மது காளைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மது ஊர்வலமானது ஜெயவிளங்கி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு சின்னபொற்குடையான், சந்தைப்பேட்டை, ஏம்பல் சாலை, சிவன் கோயில் சாலை வழியாக மது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நடைபெறும் மது களைப்பு நிகழ்ச்சியின் போது மது குடங்களில் இருந்த தென்னம் பாளை, நெல் மணிகளை கீழே கொட்டி களைக்கப்பட்டது. பின்னர் மக்கள் கீழே கொட்டப்பட்ட நெல்லில் ஒரு கை பிடி எடுத்து கொண்டு வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

இந்த கைபிடி நெல்லை வீட்டில் விவசாயத்திற்காக சேமித்து வைக்கபட்டுள்ள விதைநெல்லுடன் கலந்து வைத்து விவசாயம் செய்தால் எதிர்வரும் காலங்களில் விவசாயம் செய்யும் போது அமோக விளைச்சலை தரும் என அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்த வழக்கம் பல ஆண்டுகளாக பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே முன்னதாக நடைபெற்ற பால்குடம், காவடி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை காண சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிப்பட்டு சென்றனர். விழா ஏற்பாடுகளை அரிமளம் ஊர் அம்பலகாரர்கள், கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். அரிமளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் ஜெயவிளங்கியம்மன் கோயில் மாசி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Jayawalankiyamman Temple Masi Festival ,Chief Minister ,Masi festival ,Arimala ,Pudukkottai district ,Arimalam Jayawalangiamman Temple ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...