ஊட்டி, பிப்.28: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் குறைந்து வருவதால், கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பார்சன்ஸ்வேலி, டைகர்ஹில், மார்லிமந்து, கோரிசோலா, கிளன்ராக், அப்பர் மற்றும் லோயர் கோடப்பமந்து, அப்பர் மற்றும் லோயர் தொட்டபெட்டா அணைகள், ஓல்டு ஊட்டி உள்ளிட்ட அணைகள் பயன்பட்டு வருகிறது.
இதில், முக்கிய நீர் ஆதாரமாக பார்ன்ஸ்வேலி அணை உள்ளது. அதற்கு அடுத்தபடியாக டைகர்ஹில் அணை பயன்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யாத நியைலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்துள்ளது. இதற்கு ஊட்டி நகராட்சிக்குட்பட்ட அணைகளும் விதிவிலக்கில்லை. பார்சன்ஸ்வேலி அணை உட்பட ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடநீர் ஆதரமாக உள்ள டைகர்ஹில், மார்லிமந்து அணை உட்பட அனைத்து அணைகளிலும் தண்ணீர் அளவு குறைந்து வருகிறது.
தற்போது நகராட்சிக்குட்பட்ட அனைத்து அணைகளிலும தண்ணீர் அளவு குறைந்த நிலையில், பார்சன்ஸ்வேலி அணை நீர் கொண்டே மக்களின் தாகத்தை பூர்த்தி செய்யப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை 10 நாட்களுக்கு ஒரு முறை என நகராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகம் செய்து வருவதால், ஊட்டி நகரில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோடை சீசன் நெருங்கிய நிலையில் அடுத்த மாதம் முதல் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். சுஆனால், போதுமான தண்ணீர் இல்லாத நிலையில், இம்முறை சுற்றுலா பயணிகளும் போதிய தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே போன்று வறட்சி ஏற்பட்டு தண்ணீர் இல்லாத நிலையில், பொதுமக்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
The post ஊட்டி நகராட்சி அணைகளில் தண்ணீர் குறைகிறது: கோடையில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு appeared first on Dinakaran.