×

விசைப்படகால் மோதி மீனவர் கொலை நாகை தாலுகா மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்

நாகை: விசைப்படகால் மோதி மீனவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாகை தாலுகா மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அக்கரைப்பேட்டை திடீர்குப்பத்தை சேர்ந்த ஆத்மநாதன்(33), இவரது சகோதரர்கள் சிவநேசசெல்வம்(25), காலாத்திநாதன்(22) ஆகியோர் நேற்று முன்தினம் நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றனர். நாகை துறைமுகத்திற்கு கிழக்கே 2 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது கீச்சாங்குப்பத்தை சேர்ந்த கோகிலா என்ற பெயரில் ஒரு விசைப்படகு வந்தது. அந்த விசைப்படகு, கடலில் விரித்து வைத்திருந்த சந்தோஷின் பைபர் படகு வலைகளை அறுத்து சென்றனர். இதனால் விசைப்படகில் இருந்த 7 மீனவர்களுக்கும், பைபர் படகில் இருந்த 3 மீனவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விசைப்படகால் பைபர் படகு மீது மோதினர். இதில் பைபர் படகு கவிழ்ந்ததால் 3 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். பின்னர் 3 மீனவர்களையும் விசைப்படகு மீனவர்கள் ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த நம்பியார் நகரை சேர்ந்த மீனவர்கள் பார்த்து 2 மீனவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவநேசசெல்வம் இறந்தார். இதைதொடர்ந்து விசைப்படகில் சென்று கொண்டிருந்த தர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டபாணி ஆகிய 7 பேரை வேதாரண்யம் போலீசார் படகில் சென்று கைது செய்தனர். கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை இன்று 2வது நாளாக சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் குழும போலீசார் தேடி வருகின்றனர். இந்தநிலையில் செருதூரில் நாகை தாலுகா மீனவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பைபர் படகுகள் மீது விசைப்படகுகள் மோதுவதை தடுக்க வேண்டும். விசைப்படகு உரிமையாளரை கைது செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து நாகை தாலுகாவை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் இன்று (27ம் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாகை தாலுகாவை சேர்ந்த 1,500 பைபர் படகுகளை சேர்ந்த 2,500 மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

The post விசைப்படகால் மோதி மீனவர் கொலை நாகை தாலுகா மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Tags : Nagai taluk ,Nagai ,Santhosh ,Nagai Akkaripet ,Atmanathan ,Piper ,Sivanesaselvam ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...