×

இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கு காசி கூட்டாளியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

நாகர்கோவில்: நான்கு ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில் காசியின் கூட்டாளியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி (27). இவர், பல இளம்பெண்கள், மாணவிகளிடம் பழகி ஆபாசமான முறையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்ததுடன், அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக் கூறி, அந்த பெண்களிடம் பணம் பறித்தும் ஏமாற்றினார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கடந்த 2020ல் கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ராமன்புதூரை சேர்ந்த ராஜேஷ் சிங் துபாயில் இருந்ததால் அவரை கைது செய்யமுடியவில்லை. இந்நிலையில் துபாயில் இருந்து நாகர்கோவில் வருவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராஜேஷ் சிங்கை கடந்த 26ம் தேதி விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.

பின்னர் ராஜேஷ்சிங்கை, நாகர்கோவில் அழைத்து வந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் ராஜேஷ்சிங்கிடம் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது.

எனவே இவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று அல்லது நாளை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். காசி மீது கடந்த 2020ம் ஆண்டு 7 வழக்குகளும், 2021 ல் ஒரு வழக்கும் என மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதில் ஒரு வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

The post இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கு காசி கூட்டாளியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Kashi ,Nagercoil ,CBCID ,Nagercoil Kashi ,Ganesapuram ,Nagercoil, Kanyakumari district ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது