×

பெரியபாளையம் அருகே பைக்கில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது: செல்போன், பைக் பறிமுதல்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 6கிலோ கஞ்சா பறிமுதல். இருச்சக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்த இருவர் கைது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் வழியாக ஆந்திராவில் இருந்து கஞ்சா உள்பட பல்வேறு போதைபொருட்கள் கடத்தி வரப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மேற்கண்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு பெரியபாளையம் அருகே நெய்வேலி கூட்டுச் சாலையில் தனிப்படை போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். அங்கு போலீசாரை பார்த்ததும் பைக்கில் வந்த 2 பேர் தப்பியோட முயற்சித்தனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று, மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இச்சோதனையில், அவர்கள் இருவரும் பைக்கில் கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், இருவரையும் பெரியபாளையம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் இருவரும் ஊத்துக்கோட்டை அருகே வேளகாபுரத்தை சேர்ந்த விக்கி (30), செல்வராஜ் (26) எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக கடத்தி வந்து, பெரியபாளையம் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்ஐ சிவா வழக்குப்பதிவு செய்து, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த விக்கி, செல்வராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 2 செல்போன் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெரியபாளையம் அருகே பைக்கில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது: செல்போன், பைக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Andhra ,Oothukottai ,Tiruvallur district ,
× RELATED எல்லாபுரம் ஒன்றியத்தில் புதர்கள்...