×

முன் விரோதம் காரணமாக ஓபிஎஸ் அணி நிர்வாகி கார் ஏற்றிக் கொலை: பாஜ பிரமுகர் சரண்

வைகுண்டம்: வைகுண்டம் அருகே ஓபிஎஸ் அணி ஒன்றியச் செயலாளர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சரணடைந்த பாஜ பிரமுகர் சங்கர் கணேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் அடுத்த ஆதிச்சநல்லூரை சேர்ந்தவர் சங்கர்கணேஷ் (44). இவர், ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆவார். தற்போது இவரது மனைவி பார்வதி ஆதிச்சநல்லூர் பஞ். தலைவராக இருந்து வருகிறார். சங்கர்கணேசுக்கும், இதே ஊரைச் சேர்ந்த நங்கையாரின் மகனும், ஓபிஎஸ் அணியின் வைகுண்டம் ஒன்றியச் செயலாளரான நல்லகண்ணு என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று ஆதிச்சநல்லூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் நல்லகண்ணு மற்றும் அவரது தம்பி ஆகியோர் வாழைத் தார்களை வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சங்கர்கணேசுக்கும், நல்லகண்ணுவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே, நல்லகண்ணு அரிவாளால் சங்கர்கணேசை வெட்டச் சென்றுள்ளார். உடனே வாழை தோட்டம் அருகே நிறுத்தியிருந்த தனது காரில் ஏறி சங்கர்கணேஷ் அமர்ந்து கொண்டார். இதையடுத்து அரிவாளால் கார் கண்ணாடியை நல்லகண்ணு வெட்டியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த சங்கர்கணேஷ் தனது காரை வேகமாக இயக்கி நல்லகண்ணு மீது பயங்கரமாக மோதிவிட்டு தப்பி சென்று விட்டார். இதில் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்த நல்லகண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையில் வைகுண்டம் காவல் நிலையத்திற்கு காருடன் சென்ற சங்கர்கணேஷ் அங்கு சரணடைந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள சங்கர்கணேஷ், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

The post முன் விரோதம் காரணமாக ஓபிஎஸ் அணி நிர்வாகி கார் ஏற்றிக் கொலை: பாஜ பிரமுகர் சரண் appeared first on Dinakaran.

Tags : OPS ,BJP ,Charan ,Vaikundam ,Shankar Ganesh ,Sankarganesh ,Adichanallur ,Vaikundam, Thoothukudi district ,
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி