×

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் அச்சம்; 7 அடி உயர கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: அதிகாரிகள் விசாரணை


சென்னை: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில், விஐபி பயணிகள் வருகை பகுதியான 4ம் எண் கேட்டில், 7 அடி உயர கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து நொறுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை, தொடர்ச்சியாக கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. உள்நாட்டு விமான முனையம், சர்வதேச முனையம் என்று மாறி மாறி கண்ணாடிகள் உடைந்து விழுவது வாடிக்கையாக இருந்து வந்தது. 90 முறைகளையும் தாண்டி இந்த விபத்துகள் நடந்தன. நல்வாய்ப்பாக பெரிய அளவில் காயங்கள், உயிர் சேதங்கள் ஏற்படாமல், ஒரு சிலர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்துகளை தடுப்பது, சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக விளங்கியது.

சென்னை விமான நிலையம் என்றாலே, கண்ணாடி உடைந்து விழும் விமான நிலையம் தானே என்று கேட்கும் அளவு இருந்தது. அதன் பின்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்ணாடிகள் உடைந்து விழுவது நின்றது. விமான நிலைய அதிகாரிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனாலும் கடந்த ஆண்டு ஒரு முறை, சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெரிய கண்ணாடி கதவு உடைந்து மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் ஒன்று வருகை பகுதியில் நான்காவது கேட்டில் உள்ள, 7 அடி உயர கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது. அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். கண்ணாடி உறுதியானதாக இருந்ததால் சிதறி கீழே விழாமல், நொறுங்கி கதவிலேயே இருந்தது. இந்த நான்காவது கேட் யாரும் பயன்படுத்தாமல் மூடியே இருக்கும். வெளிமாநில கவர்னர்கள், வெளிநாட்டு தூதர்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் செல்லும்போது மட்டும், அந்த கேட் திறக்கப்படும். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் யாருக்கும் சிறப்பு அனுமதி கிடையாது.

இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து வந்து உடைந்த கண்ணாடி கதவை ஆய்வு செய்தனர். அதை இரவோடு இரவாக மாற்றி, புதிய கண்ணாடி கதவு அமைத்தனர். மேலும் இந்த கண்ணாடி கதவு எப்படி உடைந்தது என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடுமையான கோடை வெப்பத்தில் கண்ணாடி மெல்ட் ஆகி உடைந்திருக்கலாம். அல்லது தற்போது சென்னை விமான நிலையத்தில், 2வது பேஸ் கட்டுமான பணி நடப்பதால், கம்ப்ரஸர்கள் மற்றும் இயந்திரங்கள் இயக்கப்படும் போது அதிர்வுகள் பெரிய அளவில் உருவாகி உடைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அங்குள்ள மற்ற கண்ணாடி கதவுகளையும், நிபுணர்கள் குழுவினர் முழுமையாக ஆய்வு செய்து, உறுதியில்லாமல் இருக்கும் பழைய கண்ணாடி கதவுகளை எடுத்துவிட்டு, புதிய கதவுகளை பொருத்தும்படி விமான நிலைய ஊழியர்கள் தரப்பில் கூறுகின்றனர். இல்லையென்றால், விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்குவது மீண்டும் தொடர்கதையாகி, பயணிகள், ஊழியர்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

The post சென்னை விமான நிலையத்தில் மீண்டும் அச்சம்; 7 அடி உயர கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,CHENNAI ,Gate 4 ,
× RELATED சென்னை விமான நிலையம் முதல்...