×

பல கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்; ஒன்றிய அரசுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை

டெல்லி: விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதாரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம், பயிர் கடன் ரத்து செய்ய வேண்டும் மற்றும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், டெல்லி எல்லைப் பகுதியில் போலீசார், துணை இராணுவப்படை குவிக்கப்பட்டு டெல்லி நுழையாமல் தடுத்து வருகிறார்கள். இதை மீறி நுழைய முயலும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுகின்றன. போராட்டத்தில் ஈடுபடும் விவசாய சங்கங்களுடன் மத்திய அமைச்சர்கள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நேற்று மாலை மீண்டும் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. நேற்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் நாளை மறுநாள் மீண்டும் மத்திய அரசு உடன் விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மத்திய பாஜக அரசை கண்டித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா விவசாய சங்கம் நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் நடத்த போவதாக அழைப்பு விடுத்திருந்தனர். இந்த பாரத் பந்த் போராட்டத்துக்கு பல்வேறு விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. இந்த போராட்டத்தின் 3-வது நாளான நேற்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா மாவட்டத்தின் ராஜ்புராவில் உள்ள ரயில் நிலையத்தில் விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பல கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்; ஒன்றிய அரசுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union Government ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை