×

மருமகனுக்கு வேலை வாங்கித் தருவதாக அதிமுக மாவட்ட செயலாளர் ரூ.40 லட்சம் வாங்கி மோசடி: எடப்பாடிக்கு சொந்த கட்சி நிர்வாகியே கடிதம் எழுதியதால் பரபரப்பு

சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாஜலம். இவர் மீது சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி.ராஜூ பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில், ‘எனது மருமகன் ஜெகன், தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் ரூ.30 லட்சம் வாங்கினார், ஆனால் வேலை வாங்கி தரவில்லை.

பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. மேலும் மருத்துவக்கல்லூரி அருகே ரூ.2.50 கோடி பிரச்னைக்குரிய இடத்தை 55 லட்சம் ரூபாய்க்கு அவரது அக்கா மகனுக்கு வாங்கி கொடுத்தேன். அதற்கான கமிஷன் 20 லட்சம் ரூபாய் எனக்கு தரவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தபோது அழகாபுரத்தை சேர்ந்த சுசீலா, ஜான்சன்பேட்டையை சேர்ந்த நர்மதா ஆகியோருக்கு அங்கன்வாடி சத்துணவு பணியாளர் வேலை தருவதாக 2 பேரிடம் தலா ரூ.5 லட்சம் வாங்கிக் கொடுத்தேன். அந்த பணியும் தரவில்லை.

பணமும் திருப்பி தரவில்லை. எனவே விசாரணை நடத்தி நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இந்த புகார் கடிதத்தை அவரது வாட்ஸ் அப் குரூப்பிலும் வெளியிட்டுள்ளார். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் கூறுகையில், ‘ஏ.வி.ராஜூ மனசாட்சியில்லாமல் பொய் சொல்கிறார். நான் இதுவரை ஒரு ரூபாய் கூட யாரிடமும் வாங்கியதில்லை. அப்படி வாங்கியதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகி விடுவேன்.பொய்யான தகவலை கொடுக்கும் ராஜூ மீது கட்சி தலைமை ஒப்புதல் பெற்று நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.

The post மருமகனுக்கு வேலை வாங்கித் தருவதாக அதிமுக மாவட்ட செயலாளர் ரூ.40 லட்சம் வாங்கி மோசடி: எடப்பாடிக்கு சொந்த கட்சி நிர்வாகியே கடிதம் எழுதியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK district ,Edappadi ,Salem ,Former ,MLA ,Venkatajalam ,Salem City District ,AIADMK ,Salem West Union ,AV Raju ,General Secretary ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...