×

தாராசுரம் அருகே விபத்து: தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி

கும்பகோணம், பிப்.14:கும்பகோணம் அருகே தாராசுரம் அடுத்த எலுமிச்சங்காபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் கலியமூர்த்தி (84). நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்த்து விட்டு தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு தனியார் பேருந்தில் வந்து கொண்டிருந்தார். இந்த பேருந்தை மயிலாடுதுறை மாவட்டம், வடமட்டம் அருகே கோனேரிராஜபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி மகன் அரவிந்த் (27) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்நிலையில் பேருந்து தாராசுரம் நிறுத்தத்தை நெருங்கிய போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்பு ஒரு நபர் வந்ததால் டிரைவர் அரவிந்த் திடீரென பேருந்தை நிறுத்தினார். இதனால் படிக்கட்டின் அருகே இறங்குவதற்காக நின்று கொண்டிருந்த கலியமூர்த்தி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பேருந்தின் சக்கரத்தில் கலியமூர்த்தி மாட்டிக்கொண்டதால் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கலியமூர்த்தியின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை தாலுகா காவல் நிலையம் எடுத்துச்சென்று டிரைவர் அரவிந்த்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தாராசுரம் அருகே விபத்து: தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Dharasuram ,Kumbakonam ,Ramaswamy ,Kaliamoorthy ,Elumichangapaliyam ,Tarasuram ,Neyveli Brown Coal Company ,Thanjavur ,Thanjavur Medical College ,
× RELATED கும்பகோணத்தில் 10 அடி பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர்..!!