×

உரிமம் இல்லாமல் திருமண நிகழ்வில் பஞ்சுமிட்டாய் வழங்கினால் அபராதம், நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

புதுச்சேரி: உரிமம் இல்லாமல் திருமண நிகழ்வில் பஞ்சுமிட்டாய் வழங்கினால் அபராதம், நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது . புதுச்சேரிக்கு அதிகமானோர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் குழந்தைகளைக் குறிவைத்து பஞ்சு மிட்டாய் விற்கப்படுகிறது. குறிப்பாக, கடற்கரைப் பகுதிகளில் பஞ்சு மிட்டாய் அதிக அளவில் விற்கப்பட்ட சூழலில்,புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் கடந்த 7ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் பிங்க் நிறத்தில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாயில் ‘ரோடமின்-பி’ என்ற ரசாயனம் கலப்பது உறுதி செய்யப்பட்டது.

பஞ்சுமிட்டாய்களில் நச்சுப்பொருள் கலப்பதாக ஆய்வில் தெரிய வந்ததை அடுத்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் பஞ்சு மிட்டாய் விற்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் துணை நிலை ஆளுநர் தடை விதித்தார். மேலும் பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவுப் பாதுகாப்பு தரச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும். தரச்சான்று பெறாதவர்கள், உடனடியாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை முறையாக அணுகி தரச்சான்று பெற்று பஞ்சுமிட்டாய் விற்பனையைத் தொடங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அதுவரை பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுபவர்கள்மீது விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது. இந்நிலையில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் பஞ்சு மிட்டாய் வழங்க உணவு பாதுகாப்பு துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. பஞ்சு மிட்டாய் வழங்கும் கேட்டரிங் நிறுவனம், லைசென்ஸ் வைத்து இருக்க வேண்டும் எனவும் உரிமம் இல்லாமல் திருமண நிகழ்வில் பஞ்சுமிட்டாய் வழங்கினால் அபராதம், நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்தது.

The post உரிமம் இல்லாமல் திருமண நிகழ்வில் பஞ்சுமிட்டாய் வழங்கினால் அபராதம், நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : PUDUCHERRY ,FOOD SAFETY DEPARTMENT ,PANCHUMITTAI ,Panchumitai ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்...