×

(தி.மலை) எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் மாடுகள் முட்டி 5 பேர் படுகாயம் செங்கம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில்

 

செங்கம், பிப். 12: செங்கம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் நேற்று எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது மாடுகள் முட்டியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் சார்பாக பொங்கல் விழாவினையொட்டி எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான எருது விடும் விழா நேற்று நடந்தது. இதில் சுற்றுப்புற நகரங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின. குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கினை அடைந்த காளையின் உரிமையாளர்களுக்கு முதல், இரண்டு, 3ம் பரிசுகள் வழங்கப்பட்டது.

எருது விடும் விழாவை திரளான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். இதில் மாடுகள் முட்டியதில் பார்வையாளர் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கம் அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல தீயணைப்புத் துறை, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செங்கம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் நேற்று எருது விடும் விழாவில் இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளை.

 

The post (தி.மலை) எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் மாடுகள் முட்டி 5 பேர் படுகாயம் செங்கம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் appeared first on Dinakaran.

Tags : T.Malai ,Barangampattu ,Badugayam Sengam ,Sengam ,Brangampatu village ,Thiruvannamalai district ,Th. Malai ,Dinakaran ,
× RELATED (தி.மலை) பழங்குடியின மக்கள்...