×

பெல்ஜியம் நாட்டு சர்வர்களில் இருந்து 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது கண்டுபிடிப்பு: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: சென்னையில் உள்ள 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் பெல்ஜியம் நாட்டு சர்வர்களில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபலமான 13 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகர், முகப்பேர், பிராட்வே, துரைப்பாக்கம் என ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகள் என 13 பிரபல தனியார் பள்ளிகளுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காலை ‘jhonflow1@proton.me’ என்ற பெயரில் தனித்தனியாக மின்னஞ்சல் வந்தது.

அதில், ‘உங்கள் பள்ளியில் 2 மிக சக்திவாய்ந்த குண்டுகள் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலில் மேற்கு அண்ணாநகரில் உள்ள பிரபல பள்ளியில் இருந்து காவல்துறைக்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று சோதனையிட்டனர். இதையடுத்து அடுத்தடுத்து 13 பள்ளிகளில் இருந்து காவல்துறைக்கு வெடி குண்டு மிரட்டல் வந்தாக புகார் வந்தது. போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் ஒரு வெடி குண்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு தான் இது வெறும் புரளி என தெரியவந்தது.

இதுதொடர்பாக, 13 தனியார் பள்ளிகளின் நிர்வாகம் அளித்த புகாரின்படி, போலீசார், மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதே பாணியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களின் பட்டியலை சேகரிக்கும் பணியில் சென்னை போலீசார் ஈடுபட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பழைய குற்றவாளிகளின் விவரங்களை சென்னை போலீசார் தேடி வந்தனர்.

மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து யாரெனும் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளனரா என்றும் விசாரித்தனர். இந்நிலையில், அந்த மின்னஞ்சல் முகவரி பெல்ஜியம் நாட்டினுடையது என காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தற்போது அந்த மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார், அவர் எதற்கு தேர்ந்தெடுத்து தனியார் பள்ளிகளுக்கு மட்டும் அனுப்பினார். அவரது உறவினர்கள் யாரேனும் அந்த பள்ளிகளில் படிக்கிறார்களா என சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பெல்ஜியம் நாட்டு சர்வர்களில் இருந்து 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது கண்டுபிடிப்பு: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Belgium ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…