×

மரக்காணம் அருகே மீனவர்கள் கோஷ்டி மோதல்: 5 பேர் படுகாயம்

மரக்காணம், பிப். 9: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 மீனவ கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மீனவர்களுக்கு அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் டீசலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் கூறியும் மீன்வளத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட எக்கியர்குப்பம் மீனவர் பகுதியில் மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று மீனவர்களின் பல்வேறு குறைகளை கேட்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் மீன்வளத்துறையில் உறுப்பினர்களாக சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் எங்களுக்கு இதுவரையில் மானிய விலையில் டீசல் உள்ளிட்ட பல்வேறு அரசு நிவாரணங்கள் முறையாக கிடைக்கவில்லை என குறை கூறியுள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஒரு சிலர் அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் (48) என்பவரது ஆதரவாளர்களுக்கும், முருகன் (35) என்பவரது ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சுரேசும் அவரது ஆதரவாளர்களும் கூட்டத்தில் இருந்து வெளியே சென்றனர். அப்போது அவர்களை முருகன் ஆதரவாளர்கள் வழிமறித்து தாக்கி உள்ளனர். தொடர்ந்து இருதரப்பினரும் தடி, இரும்பு பைப், வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கினர்.இதில் சுரேஷ் (48), வல்லரசு (25), ஆகாஷ் (23), முருகன் (35) உள்பட இருதரப்பையும் சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீனவ கிராம மக்கள் மீட்டு மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவலறிந்ததும் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post மரக்காணம் அருகே மீனவர்கள் கோஷ்டி மோதல்: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Villupuram district ,Fisheries Department ,Marakkanam ,Dinakaran ,
× RELATED மேய்ச்சலுக்கு சென்றபோது கத்தியால் வெட்டியதில் குடல் சரிந்து பசு மாடு பலி