×

கொல்கத்தாவில் இருந்து அம்பத்தூருக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவர் சிக்கினர்

அம்பத்தூர்: கொல்கத்தாவில் இருந்து அம்பத்தூருக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், பட்டரவாக்கம், கொரட்டூர், திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளுக்கு கஞ்சா கடத்தி வருவதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பத்தூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் தனிப்படை போலீசார் அம்பத்தூர் கருக்கு மேம்பாலம் இந்திரா நகர் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு ஒருவர் கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரது பையை சோதனையிட்டபோது, அதில் 11 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது.அதை பறிமுதல் செய்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா (24) என்பதும், கொல்கத்தா சென்று அங்கிருந்து கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்து அம்பத்தூரில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.மேலும் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அண்ணா நகரை சேர்ந்த கிஷோக்லால் (25) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் போலீசார் வழக்குப் பதிந்து நேற்று முன்தினம் இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கொல்கத்தாவில் இருந்து அம்பத்தூருக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Ambattur ,Bhattaravakkam ,Korattur ,Tirumullaivayal ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...