×

ரூ.1 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் நபர்கள் 2.16 லட்சமாக உயர்வு

புதுடெல்லி,பிப்.7: நாடாளுமனறத்தில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த அறிக்கை: 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள ஐடிஆர் சமர்ப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கையை 2019-20ல் 1.09 லட்சமாக இருந்தது. 2022-23ல் 2.16 லட்சமாக உயர்ந்துள்ளது. தொழில்கள் மூலம் ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டியதில் 2022-23ல் 10,528 ஆக இருந்த எண்ணிக்கை 2023-24ல் 12,218 ஆக உயர்ந்தது.

* கடந்த 4 ஆண்டுகளில் 247 பேர் விமானத்தில் பறக்க தடை விதிப்பு

மாநிலங்களவையில் ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: விமானத்தில் அத்துமீறும் பயணிகள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும் பட்டியலில் இடம் பெற்று வருகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் 247 பயணிகள் விமானத்தில் பறக்க தடை விதிக்கும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர் கடந்த ஆண்டு மட்டும் 108 பேருக்கு தடை விதிக்கப்பட்டது.

* ரூ.6000 உதவித்தொகையை உயர்த்தும் எண்ணம் இல்லை
பி.எம்-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8,000-12,000 வரை நிதிப் பலனை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று ஒன்றிய விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். 2018 முதல் 2022 வரை

* 701 தேசத்துரோக வழக்கு
2018 முதல் 2022 வரை தேசத் துரோக வழக்குகள் மற்றும் அரசுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 701 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 5,023 வழக்குகள் உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. உபா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட 550 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று மக்களவையில் ஒன்றிய அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.

* 2200 மோசடி ஆப்கள் கூகுளில் இருந்து நீக்கம்
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கே காரத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: மோசடி கடன் ஆப்களை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் 2022 செப்டம்பர் முதல் 2023 ஆகஸ்ட் வரை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 2,200 க்கும் மேற்பட்ட மோசடி கடன் ஆப்கள் நீக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 2021 ஏப்ரல் முதல் 2022 ஜூலை வரை 2500 மோசடி ஆப்கள் நீக்கப்பட்டன. 2022-23 ஆம் ஆண்டில் யுபிஐ தொடர்பான 7.25 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த மோசடி வழக்குகளில் சிக்கிய தொகை ரூ.573 கோடி ஆகும். இவ்வாறு அவர்தெரிவித்தார்.

* மதுரை உள்பட 6 எய்ம்ஸ் பயன்பாட்டிற்கு வரவில்லை
நாடு முழுவதும் 22 அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை (எய்ம்ஸ்) அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜ்கோட் (குஜராத்), விஜய்பூர் (ஜம்மு), மதுரை (தமிழ்நாடு), அவந்திபோரா (காஷ்மீர்), ரேவாரி (ஹரியானா), மற்றும் தர்பங்கா (பீகார்) ஆகிய 6 எய்ம்ஸ் பணிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளன என்று ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் தெரிவித்தார்.

The post ரூ.1 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் நபர்கள் 2.16 லட்சமாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Minister of State for Finance ,Pankaj Chaudhary ,Parliament ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு