*ஏப்ரல் மாதத்தில் மலர்கள் பூக்க துவங்கும்
ஊட்டி : கோடை சீசனில் நடக்கும் ரோஜா கண்காட்சிக்கு தயார்படுத்தும் வகையில் ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணிகள் நேற்று துவங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். ஊட்டியில் நிலவும் மிதமான சீதோசன நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்த்து மகிழ்கின்றனர்.
குறிப்பாக கோடை சீசன் சமயமான ஏப்ரல், மே மாதத்தில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். கோடை சீசனுக்கு வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டு தோறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு அணி வகுப்பு மற்றும் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிக்கள் நடத்தப்படுகின்றன. கோடை விழா நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஊட்டி விஜய நகரம் பகுதியில் உள்ள ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது.
இப்பூங்கா கடந்த 1995ம் ஆண்டு துவக்கப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 ஆயிரத்து 201 வீரிய ரகங்களை கொண்ட 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. மேலும் இந்த ரோஜா பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு என தனியாக இடம் உள்ளது. பாரம்பரிய ரோஜா பூங்காவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரம்பரிய மிக்க ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இப்பூங்கா தென்கிழக்கு ஆசியா நாடுகளிலேயே மிக அதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக திகழ்கிறது. இந்நிலையில், கோடை சீசன் சமயத்தில் ரோஜா கண்காட்சி தயார்படுத்தும் வகையில் பூங்காவில் உள்ள ரோஜா மலர் செடிகளை கவாத்து செய்யும் பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் அருணா துவக்கி வைத்தார். ரோஜா நாற்றுகளில் வெட்டப்பட்ட பகுதியில் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது.
இவை ஏப்ரல் மாதத்தில் பூக்க துவங்கிவிடும். ரோஜா கண்காட்சி சமயத்தில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) அப்ரோஸ்பேகம், உதவி இயக்குநர்கள் அனிதா, ஜெயந்தி பிரேம்குமார் உட்பட பலர் கலந்து ெகாண்டனர்.
சுற்றுலா பயணிகளை கவர வேண்டும்
ஊட்டி ேராஜா பூங்காவில் கவாத்து பணிகளை துவக்கி வைப்பதற்காக கலெக்டர் அருணா பூங்காவிற்கு வருகை புரிந்தார். பணிகளை துவக்கி வைத்த பின் பூங்காவை பார்வையிட்ட அவர் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படுவதில்லை. எப்போதுமே, ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கே சலிப்பு ஏற்படுகிறது. பூங்காவில் உள்ள உள் மைதானங்கள் போன்றவை காலியாகவே உள்ளன. எனவே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் அலங்காரம் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுரைகள் வழங்கினர்.
The post ஊட்டி ரோஜா பூங்காவில் கோடை சீசனுக்காக ரோஜா செடிகள் கவாத்து பணி துவக்கம் appeared first on Dinakaran.