×

முகப்பேரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்த மூதாட்டியை அடித்து கொன்ற பணிப்பெண்: சிசிடிவி கேமரா பதிவால் சிக்கினார்

அண்ணா நகர், பிப்.6: முகப்பேரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்த மூதாட்டி அடித்து கொன்ற பணிப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள கேஜிஎஸ் அடுக்குமாடி குடியிருப்பில், பொன் ராசாத்தி (84) என்வர் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 4 பிள்ளைகள். ஒருவர் அமெரிக்காவிலும், மற்றவர்கள் சென்னையில் வெவ்வேறு இடங்களில், குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். தனியாக வசித்து வரும் மூதாட்டியை உடன் இருந்து கவனித்துக்கொள்ள, அயனாவரத்தை சேர்ந்த கன்னியம்மாள் (51) என்பவரை, மாதம் 12 ஆயிரம் சம்பளத்தில் மகன்கள் நியமித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பொன் ராசாத்தி கீழே விழுந்து, எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கன்னியம்மாள் அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தார்.

வீட்டுக்கு விரைந்து வந்த மூதாட்டியின் பிள்ளைகள், அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு கன்னியம்மாளிடம் விசாரித்த போது, பதிலளிக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இதுபற்றி பணிப்பெண்ணிடம் கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், அவர் மீது சந்தேகமடைந்த குடும்பத்தினர், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பணிப்பெண் கன்னியம்மாள், மூதாட்டியை சரமாரியாக கையால் தாக்கி, காலால் எட்டி உதைக்கும் பதற வைக்கும் காட்சி பதிவாகி இருந்தது.

இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நொளம்பூர் காவல் நிலையத்தில், புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அன்றே கன்னியம்மாளை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக, நொளம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post முகப்பேரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்த மூதாட்டியை அடித்து கொன்ற பணிப்பெண்: சிசிடிவி கேமரா பதிவால் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Mukhabar ,Anna Nagar ,Mukkapher ,Pon Rasathi ,KGS ,Mukkapher West ,
× RELATED அண்ணா நகரில் துப்பாக்கி சூடு? பெண் புகாரால் பரபரப்பு