வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, அதை ஒட்டி உள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டதாக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் மசூதியில் இந்து கடவுள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மசூதியின் அடித்தளத்தில் அமைந்துள்ள பாதாள அறையில் இந்து பூஜைகள் செய்யவும், 7 நாட்களில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
உத்தரவு வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே அதற்கான ஏற்பாடுகள் அவசர அவசரமாக செய்யப்பட்டுள்ளன. இரவு 10.30 மணி அளவில் பாதாள அறை திறக்கப்பட்டு வியாஸ் குடும்பத்தை சேர்ந்த பூசாரி சோம்நாத் வியாஸ் பூஜை நடத்தியதாக காசி விஸ்வநாதர் கோயில் அறக்காவலர் தலைவர் நகேந்திர பாண்டே நேற்று கூறினார். தொல்லியல் துறையால் மசூதியில் கண்டெடுக்கப்பட்ட அனுமன் சிலை மற்றும் லட்சுமி தேவி, விநாயகப் பெருமான் விக்ரகங்களுக்கு ஆரத்தி நடத்தப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
The post நீதிமன்றம் உத்தரவிட்ட சில மணி நேரத்தில் ஞானவாபி மசூதியில் பூஜை தொடங்கியது appeared first on Dinakaran.