×

இளம்பெண்ணை வழிமறித்து பலாத்கார முயற்சி ஆந்திர ஆளும் கட்சி பிரமுகருக்கு வலை

திருமலை: தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட ஆளும் கட்சி பிரமுகரான கிராம செயலக ஒருங்கிணைப்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம் கொல்லதொட்டி பகுதியை சேர்ந்தவர் 30 வயதுள்ள இளம்பெண். திருமணமான இவர் வெங்கடாபுரத்தில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 26ம்தேதி மாலை கடையை பூட்டிவிட்டு அங்குள்ள ஏரிக்கரை வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது கிராம செயலக ஒருங்கிணைப்பாளராக உள்ள நடராஜ் (33) என்பவர் இந்த பெண்ணை தடுத்து நிறுத்தி பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டாராம்.

இதற்கு எதிராக அந்தப் பெண் போராடியதால் ஆத்திரமடைந்த நடராஜ், அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் காலால் எட்டி உதைத்துள்ளார். அப்போது அங்குள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் விரைந்து வந்து தடுக்க முயன்றார். அவரையும் நடராஜ் தாக்கியுள்ளார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு வந்தனர். அவர்களை பார்த்த நடராஜ் தப்பியோடி விட்டார். படுகாயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் நடராஜ் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் என்பதும், அமைச்சர் உஷாஸ்ரீசரணின் நெருங்கிய ஆதரவாளர் என்பதாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இளம்பெண்ணை நடராஜ் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பார்த்த நெட்டிசன்கள், இச்செயலில் ஈடுபட்ட நடராஜை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர் ஆளும் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் போலீசார் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார், நேற்று நடராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

The post இளம்பெண்ணை வழிமறித்து பலாத்கார முயற்சி ஆந்திர ஆளும் கட்சி பிரமுகருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Andhra ruling party ,Tirumala ,Andhra State, ,Ananthapuram District Kollathotti ,
× RELATED ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 10...