×

காட்டெருது தாக்கியதில் சுற்றுலா பயணி படுகாயம்

 

ஏற்காடு, ஜன.26: ஏற்காட்டில் அதிகாலை கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்ற சுற்றுலா பயணி, காட்டெருது தாக்கியதில் படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து 3 கிமீ., தொலைவில் கிளியூர் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி வனப்பகுதியில் இருப்பதால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதை அறியாத சுற்றுலா பயணிகள் பலர், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நீர்வீழ்ச்சிக்கு செல்வதால், வன விலங்குகளிடம் சிக்குவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை 7.30 மணியளவில், ஈரோடு அடுத்த சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால்(32) மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர், கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது வனப்பகுதியில் திடீரென குறுக்கே வந்த காட்டெருது ஒன்று தாக்கியதில், வேணுகோபாலுக்கு வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவரது நண்பர்கள் போலீசாருக்கு கதவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், பாறைகள் நிறைந்த வனப்பகுதியில் படுகாயமடைந்து கிடந்த வேணுகோபாலை, மிகுந்த சிரமத்துடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து ஏற்காடு போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காட்டெருது தாக்கியதில் சுற்றுலா பயணி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Cleur Falls ,Salem district ,Yercaud, ,Cleur ,Dinakaran ,
× RELATED ஏற்காடு மலைப்பாதையில் 5 பேர் பலி:...