×

காடையாம்பட்டி அருகே பயங்கரம் வெடி மருந்துகளுடன் 100 அடி பள்ளத்தில் விழுந்த டிராக்டர்

*ஓட்டிச்சென்ற குவாரி சூபர்வைசர் பலி

*வெடிக்காததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

காடையாம்பட்டி : சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கல்குவாரிக்கு வெடிமருந்துகளை ஏற்றிச்சென்ற டிராக்டர் 100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சூபர்வைசர் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா நடுப்பட்டி ஊராட்சியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான கிரஷர் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 100 ஏக்கர் பரப்பில் பல்வேறு இடங்களில் 100 முதல், 300 அடி உயரம் உள்ள மலைகள் உடைக்கப்பட்டு, நில மட்டத்தில் இருந்து 100 அடி ஆழம் வரை பள்ளமாக உள்ளது. இங்கு ஜல்லிக்கற்கள், எம் சாண்ட் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த கிரஷர் கம்பெனியில் காடையாம்பட்டி அருகே உள்ள தும்பிபாடி ஒட்டத்தெரு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பரது மகன் சதீஷ்குமார் (39) சூபர்வைசராக வேலை செய்தார். நேற்று மாலை கல்குவாரியில் கம்பரசர் மூலம் குழி தோண்டப்பட்டு, குழியில் வெடி வைப்பதற்காக ஜல்லி கிரஷரில் இருந்து டெட்டனேட்டர் குச்சிகள் உள்ளிட்ட வெடி மருந்துகளை டிராக்டரில் எடுத்து சென்றுள்ளார். அப்போது திடீரென டிராக்டர் பிரேக் பிடிக்காமல் 100 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.

மேலும் டிராக்டரை ஓட்டிச்சென்ற சூபர்வைசர் சதீஷ்குமார், படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவரை, கிரஷர் ஊழியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சதீஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். டிராக்டர் விழுந்ததில் வெடிமருந்துகள் வெடிக்கவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த சதீஷ்குமாரின் உறவினர்கள் கதறி அழுதனர். தீவட்டிப்பட்டி எஸ்ஐ பழனிச்சாமி மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சூபர்வைசருக்கு முத்தமிழ் செல்வி என்ற மனைவியும், பாசினி என்ற மகள் மற்றும் கவிஸ்ரீ என்ற மகன் உள்ளனர். இவரது மகள் கடந்த 2017ம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளார். தற்போது மகன் மட்டும் உள்ளார். அவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வருமானத்தை நம்பி வயதான பாட்டி, பெற்றோர், மனைவி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post காடையாம்பட்டி அருகே பயங்கரம் வெடி மருந்துகளுடன் 100 அடி பள்ளத்தில் விழுந்த டிராக்டர் appeared first on Dinakaran.

Tags : Kadaiyambatti ,Kadayampatti ,Salem district ,Kadaiyambatti, Salem district ,Dinakaran ,
× RELATED கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு...