தஞ்சாவூர்,ஜன.20: தஞ்சாவூர் ராஜ ராஜ சோழன் சிலை அருகே குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ராஜராஜ சோழன் சிலை வழியாக பெரிய கோயிலுக்கு திரும்பும் பகுதியில் பெரிய பள்ளங்கள் சாலை நடுவில் ஏற்பட்டுள்ளது. சாலையின் திருப்பத்தில் இந்த பெரிய பள்ளங்கள் கடந்த பல மாதங்களாக இருந்து வருகிறது. மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொறியாளர்கள் தினமும் அச்சிலை வழியாக சென்று வருகின்றனர்.
மேலும் அப்பகுதி உலகப் பிரசித்தி பெற்ற பெரிய கோயில் அமைந்துள்ள பகுதி என்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், முக்கிய பிரமுகர்களும் தினமும் வந்து செல்கின்றனர். குறிப்பாக பெரிய வாகனத்தில் செல்வோருக்கு இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் இருசக்கர வாகனம், ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
அதுவும் இருசக்கர வாகனத்தில் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து அடிபட்டு எழுந்து செல்கின்றனர். மேலும் நான்கு சாலைகள் சந்திக்கும் இடமாக உள்ள நிலையில் பெரிய விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்குள் நெடுஞ்சாலை துறையினர் விழித்துக் கொண்டு இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை அருகே சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.