×

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு எழுத்தர், உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல்

 

பெரம்பலூர், ஜன.20: பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள எழுத்தர் மட்டும் உதவியாளர் 10 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2023 டிசம்பர் 24ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 387 பேரில் 325 பேர் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 பேர் நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று 19ம் தேதி பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்றது. மாவட்ட ஆள்சேர்ப்பு மைய தலைவரும், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளருமான பாண்டியன் தலைமை வகித்தார்.

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் அரசு, பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் குறைதீர் அலுவலர் கங்காதரன், பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் சிவக்குமார், பெரம்பலூர் சரக துணைப் பதிவாளர் இளஞ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்து நேர் காணலை நடத்தினர். இதில் கலந்து கொண்ட 30 பேரில், அவர்கள் ஏற்கனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண், நேர்காணலில் பெற்ற மதிப்பெண், தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றின் அடிப்படையில் 10பேர் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு எழுத்தர், உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் appeared first on Dinakaran.

Tags : Perambalur District ,Perambalur ,Registrar ,Cooperative Societies ,District ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி