×

அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு: ஓபிஎஸ் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற ஒ.பன்னீர்செல்வம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட நீக்க தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில், மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவும் கடந்த டிசம்பர் 8ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே அடிப்படை உறுப்பினர்களால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், தான் பங்குபெறாத பொதுக்குழு கூட்டத்தில் தம்மை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்து, இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. விசாரணையின் போது ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதம் செய்தார். அதில், கட்சி விதிகளின்படி நீக்கம் செய்யப்படவில்லை.

தன்னை நீக்கிய தீர்மானம் என்பது பொதுக்குழு விதிகளுக்கு முரணானது. எனவே பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எப்படி தடை விதிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். ஏற்கனவே விசாரணை நீதிமன்றத்தில் இந்த சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தற்போது தலையிட்டால் அது மேலும் சிக்கலாகி விடும். எனவே, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் தற்போது தலையிட முடியாது. அதிமுக பொதுக்குழு தொடர்பான மூல வழக்கை தொடர்ந்து நடத்தலாம். நீங்கள் தொடர்ந்து சிவில் வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள சிவில் வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும்.

விசாரணை நீதிமன்றம் இந்த சிவில் வழக்குகளை விரைந்து விசாரிக்கும் என நம்புகிறோம். எழுத்து பூர்வமான வாதங்களை அடுத்த 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இதனிடையே பொதுத்தேர்தல் வருவதால் எந்த பொறுப்பு வகிப்பது என்று தங்களிடையே குழப்பம் இருப்பதால் இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அச்சமயம், நீதிபதி கண்ணா, நான் அரசியல்வாதி இல்லை. ஆனால் இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்று நான் அறிவேன். தற்போதைய சூழ்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் அதிமுகவின் நிலை இன்னும் மோசமாகிவிடும். அதிமுகவில் பிளவு இருப்பது நன்றாக தெரிகிறது; அதற்கு கட்சியே தீர்வுகாண வேண்டும் என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

The post அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு: ஓபிஎஸ் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,OPS ,Delhi ,UN ,Extraordinary General Committee ,PANNIERSELVAM ,Secretary General ,Dinakaran ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...