×

பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருவதை முன்னிட்டு கோயிலை சுற்றியுள்ள கடைகள் இன்று மாலை முதல் மூட உத்தரவு

திருச்சி: பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருவதை முன்னிட்டு கோயிலை சுற்றியுள்ள கடைகள் இன்று மாலை முதல் மூடப்படும் என்று அறிவித்துள்ளனர். நாளை மறுநாள் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலுக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். இன்று மாலை முதல் சனிக்கிழமை மதியம் வரை ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றியுள்ள அனைத்து கடைகளையும் மூட உத்தரவு அளித்துள்ளனர். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக நாளை பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

சென்னை நிகழ்ச்சி முடிந்ததும் நாளை இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி, நாளை மறுநாள்(20ம் தேதி) காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானத்தில் திருச்சி வருகிறார். பின்னர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.

அங்கு சுமார் 40 நிமிடங்கள் கோயிலில் இருக்கும் பிரதமர், கோயில் பகுதிகளை பார்வையிட உள்ளதாக தெரிகிறது. கோயிலில் உழவார பணிகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து மதுரை புறப்பட்டு செல்கிறார். இந்நிலையில் பொன்மலை ஜி.கார்னர் ரயில்வே மேம்பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடியை, ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஈஆர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட உள்ளது. ஈஆர் பள்ளியில் இருந்து காரில் காவிரி பாலம் வழியாக பிரதமர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று விட்டு, அதே வழியில் மீண்டும் பள்ளிக்கு வந்து ஹெலிகாப்டரில் விமான நிலையம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது

The post பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருவதை முன்னிட்டு கோயிலை சுற்றியுள்ள கடைகள் இன்று மாலை முதல் மூட உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Modi ,Srirangam temple ,Trichy ,Srirangam Aranganathar Swamy Temple ,
× RELATED மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு...