×

தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட போது 29 பேருடன் மாயமான விமானம் 7 ஆண்டுக்கு பின் கண்டுபிடிப்பு: சென்னையில் இருந்து 310 கிமீ தொலைவில் கடலுக்கடியில் பாகங்கள்

புதுடெல்லி: தாம்பரத்தில் இருந்து 7 ஆண்டுகளுக்கு முன் 29 பயணிகளுடன் மாயமான விமானம் சென்னை அருகே கடலில் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 2016 ஜுலை 22ம் தேதி காலை 8.30 மணிக்கு ஒரு விமானம் அந்தமானின் போர்ட் பிளேர் நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானம் ஆகும். இதில் விமான ஊழியர்கள் 6 பேர், விமானப்படை ஊழியர்கள் 11 பேர், ராணுவ வீரர்கள் 2 பேர், கடற்படை வீரர் ஒருவர், கப்பல் மாலுமி ஒருவர், கப்பல் படை ஊழியர்கள் 8 பேர் என மொத்தம் 29 பேர் பயணம் செய்தார்கள். விமானத்தை பத்சாரா, நந்தா என்ற விமானிகள் இயக்கினர்.

விமானம் புறப்பட்ட 15 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடார் பார்வையில் இருந்தும் விமானம் மாயமானது. சென்னைக்கு கிழக்கே 370 கிமீ தொலைவில் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே நடுவானில் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது விமானம் மாயமானது தொிய வந்தது. இதையடுத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மாயமான விமானத்தை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

இந்திய விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன சென்னையில் இருந்து 145 நாட்டிக்கல் மைல் தொலைவில் விமானம் மாயமான இலக்கை குறிவைத்து தேடுதல் பணி நடந்தது. 2 மாதமாக தேடியும் மாயமான விமானம், அதில் பயணித்தவர்கள் கதி பற்றி தெரியாததால் 2016 செப்டம்பர் 15ம் தேதி தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த 29 பேரும் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மாயமான ஏ.என் 32 ரக சரக்கு விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது. சென்னைக்கு அருகே கடலில் 310 கிமீ தொலைவில் 3.40 கிலோமீட்டர் ஆழத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சோனார் கருவி மூலம் மாயமான விமானத்தின் பாகங்கள் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை; புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் சமீபத்தில் உருவாக்கப்பட்ட நீருக்கடியில் தானாக செல்லும் வாகனம் (ஏயூவி) மூலம் எடுத்த படங்களை ஆய்வு செய்ததில், சென்னை கடற்கரையில் இருந்து 310 கிமீ தொலைவில் கடலுக்கடியில் கிடந்த இடிபாடுகள் ஏஎன்-32 விமானத்தின் பாகங்கள் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தேடல் படங்கள் ஆய்வு செய்யப்பட்ட போது அவை ஏஎன்-32 விமானத்துடன் ஒத்துப் போவது கண்டறியப்பட்டுள்ளது.

விமான பாகங்கள் மீட்கப்பட்ட அதே பகுதியில் காணாமல் போன வேறு எந்த விமானமும் விபத்துக்குள்ளானதாக எந்தவித வரலாறும் பதிவு செய்யப்படவில்லை. எனவே அவை ஏஎன்- 32 விமான பாகங்கள் தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேடல் படங்களின் பகுப்பாய்வு மூலம் சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 140 கடல் மைல் (310 கிமீ) தொலைவில் உள்ள கடல் படுகையில் விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

* உறுதிப்படுத்தியது எப்படி?
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIOT) விஞ்ஞானிகள் புதிதாக வாங்கிய தானாக நீருக்கடியில் இயங்கும் வாகனத்தின் கருவிகளை சோதனை செய்தபோது கடந்த டிசம்பரில் விமான பாகங்கள் படம் பிடிக்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் 9-10 தேதிகளில் சாகர் நிதி என்ற ஆராய்ச்சிக் கப்பலில் சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 310 கி.மீ., தொலைவில் இதுபோன்ற சோதனை பயணத்தை மேற்கொண்ட போது 3,400 மீ ஆழத்தில் சோனார் கருவி படம் எடுத்து அனுப்பியது.

இதுபற்றி சென்னை நியாட் நிறுவன இயக்குனர் ஜி.ஏ ராமதாஸ் கூறுகையில்,’ சோனார் கருவி அனுப்பிய வலுவான சமிக்ஞைகள் விஞ்ஞானிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நாங்கள் கொஞ்சம் ஆழமாக சில புகைப்படங்களை எடுத்தோம். அவை இந்திய விமானப்படையுடன் புவி அறிவியல் அமைச்சகம் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்த படங்கள் மிகத் தெளிவாக உள்ளன. விபத்து நடந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகும் அதிக சேதம் இல்லை. இந்த படங்கள் மூலம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஏஎன்32 விமானத்தின் சிதைவுகள்தான் என்று இந்திய விமானப்படை உறுதி செய்தது. ஆரம்பத்தில் இந்த குப்பைகள் ஒரு கப்பலின் சிதைவுகளாக கருதப்பட்டது, ஆனால் நெருக்கமான பரிசோதனையில், ஆராய்ச்சியாளர்கள் விமானப்படை விமானத்தில் காணப்படும் மூவர்ண அடையாளத்தை கண்டுபிடித்தனர்’ என்றார்.

The post தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட போது 29 பேருடன் மாயமான விமானம் 7 ஆண்டுக்கு பின் கண்டுபிடிப்பு: சென்னையில் இருந்து 310 கிமீ தொலைவில் கடலுக்கடியில் பாகங்கள் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Chennai NEW DELHI ,Chennai ,Chennai Tambaram Air Force Base ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!