×

செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் விடுதியில் தங்கி பணிபுரிய முன்பதிவு துவக்கம்: கலெக்டர் ராகுல்நாத் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்டு உள்ள வேலை செய்யும் மகளிர் விடுதியில் தங்கி பணிபுரிவதற்கு இணையதளத்தில் முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளது. இதில் வெளியூரை சேர்ந்த பெண்கள், இங்கு தங்கி வேலைபார்க்கும் அனைத்து பெண்களும் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ராகுல்நாத் தகவல் தெரிவித்தார். இந்தியாவிலேயே பணித்திறனில் பெண்களின் பங்களிப்பில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.

இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்த பெண்கள் பணி நிமித்தம் காரணமாக, தங்களின் வீட்டைவிட்டு வெளியே வந்து, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பணிபுரியும் இடத்துக்கு அருகாமையில் குறைந்த வாடகையில் பாதுகாப்புடன் கூடிய தங்கும் விடுதிகள் இருப்பது மிக அவசியம். இக்கருத்தை தமிழ்நாடு அரசு மனதில் கொண்டு, பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்குக்காக, செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பாதுகாப்பு வசதிகளுடன் புதிதாக பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகளை தமிழ்நாடு அரசு அமைத்து செயல்படுத்தி வருகிறது.

இதற்காக தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற அமைப்பை அமைத்துள்ளது. இதன்மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் எண். 8, நிர்மலா கார்டன் ஹோம் ரோடு, ஜட்ஜ் காலனி, தாம்பரம் சானடோரியம் என்ற முகவரியில் புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் மகளிர் விடுதியை கடந்த 4ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இங்கு 461 படுக்கை வசதியுடன் இருவர் மற்றும் நால்வர் தங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுளளது. மேலும் குடிநீர், பாதுகாப்பு, இலவச வைபை வசதி, பயோமெட்ரிக் மற்றும் பொழுபோக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இவ்விடுதியில் மகளிர் தங்கி பணிபுரியும் வகையில், அந்நிறுவனத்தின் www.tnwwhcl.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து பயன்பெறலாம். இங்கு வருடங்கள், மாதங்கள் மட்டுமின்றி வாரங்கள், ஓரிரு நாட்கள்கூட தங்கி பணிபுரிவதற்கான வசதிகள் உள்ளன. எனவே, வெளியூரில் இருந்து பணிபுரிய வரும் இச்சேவையை பயன்படுத்தி முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் விடுதியில் தங்கி பணிபுரிய முன்பதிவு துவக்கம்: கலெக்டர் ராகுல்நாத் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu District ,Rahulnath ,Chengalpattu ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...