×

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

செங்கல்பட்டு, மே 9: செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சியில் இயங்கிவரும் அரசு மாதிரி பள்ளியில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறை, உயர் தொழில்நுட்ப கனிணி ஆய்வகம் மற்றும் பள்ளி சுற்றுப்புறங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நடப்பு கல்வி ஆண்டில் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி புத்தகங்கள் வழங்கி பாராட்டினார்.

அதனைத்தொடர்ந்து, ஆத்தூர் ஊராட்சியில் ₹15 கோடி மதிப்பில், தவறிழைத்த சிறார்களுக்காக கட்டப்பட்டு வரும் அரசு பாதுகாப்பு இல்லத்திற்கான கட்டிடத்தை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், ரெட்டிப்பாளையத்தில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.

அப்போது, மருந்துகள் இருப்பு, குடிநீர் வசதி, மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுற்றுபுறங்களை தூய்மையாக வைத்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு பராமறிக்குமாறு கேட்டுக்கொண்டார். இறுதியாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் அரசு சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து வேளாண் மற்றும் வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், சுகாதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ், சார் ஆட்சியர் நாராயண ஷர்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : District Monitoring Officer ,Chengalpattu district ,Chengalpattu ,Samayamurthy ,Anjoor Panchayat ,Katangkolathur Union ,
× RELATED செங்கல்பட்டு அருகே அண்ணன் மகனை கொன்ற சித்தப்பா கைது..!!