சென்னை: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுக் கூட்டம் மேயர் பிரியா முன்னிலையில், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் இன்று (09.01.2024) ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்குழுவில், மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவில் தலைவராக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவரும், மாண்புமிகு மேயர் அவர்கள், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், காவல் துறை இணை ஆணையாளர் (தலைமையிடம்) பொறுப்பு அலுவலராகவும் உள்ளனர்.
இக்குழுவானது, காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், கண்காணித்தல் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும். சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 145 காவல் நிலையங்கள் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களிலும் தலா 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியான முறையில் செயல்படுகிறதா எனவும், அதன் தரவுகள் சேமிப்பு குறித்தும் மாதந்தோறும் மேற்பார்வைக் குழுவிற்கு காவல்துறையின் மூலம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இக்கூட்டத்தில் காவல்துறை இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி கயல்விழி, இ.கா.ப., சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி அனுசியா தேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மேயர் பிரியா முன்னிலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுக் கூட்டம்.! appeared first on Dinakaran.