×

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கும்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்கும் வகிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024”ஐ நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வில், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்துள்ளன.

மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாசார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். தொழில்மயமாக்கல் வரலாற்றில், ஒரு மகத்தான அத்தியாயமாக இந்த மாநாடு இருக்கப் போகின்றது.2030ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை, 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தவேண்டும் என்று லட்சிய இலக்கை நான் நிர்ணயித்திருக்கிறேன். ஒரு மாநிலத்தில், தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றால், அந்த மாநிலத்தின் ஆட்சி மேல் நல்லெண்ணம் இருக்கவேண்டும்.

அங்கு சட்டம் – ஒழுங்கு நல்ல முறையில் பேணப்பட்டு, அமைதியான சூழல் நிலவவேண்டும். ஆட்சியாளர்கள் மேல் உயர்மதிப்பு இருக்கவேண்டும். அந்த மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கவேண்டும். 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல், இந்த அம்சங்களெல்லாம் தமிழ்நாட்டில் இருப்பதால்தான், தொழில் துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது. கடந்த இரண்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தில், பெருமளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதால், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்குகின்ற வகையில், 200-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் எங்களுடைய லட்சியம். அதனால்தான் தொழில் திட்டங்கள் எல்லாம் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே தங்களுடைய தொழில்திட்டங்களை அமைத்திருக்கிற பல நிறுவனங்கள், தங்களுடைய திட்டங்களை நன்றாக விரிவுபடுத்தியிருக்கிறார்கள் என்பது, தமிழ்நாட்டின் சிறப்பான தொழில் சூழலுக்கான அத்தாட்சி. மிகப்பெரும் தொழில் நிறுவனங்களான, ஹூண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன.

130க்கும் மேற்பட்ட “Fortune 500” நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களுடைய திட்டங்களை நிறுவியிருப்பது, தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்திருப்பதற்கு இது ஒரு சான்று. முதலீடுகளை ஈர்க்கின்ற மாநிலங்களில், இந்திய அளவில் தமிழ்நாடு முன்னணி நிலை வகிக்கிறது. உலக அளவிலான முதலீட்டாளர்களை நன்கு வரவேற்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் மிகவும் திறமையானவர்கள். முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து சேவை ஆதரவுகளையும் தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது.

அனைத்து துறைகளிலும் திறன்மிகு பணியாளர்களை இந்த மாநிலம் கொண்டுள்ளது. மூலதனம் நிறைந்த மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, மின்சார வாகனங்கள், சோலார் பிவி செல்கள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளையும், ஜவுளி மற்றும் ஆடைகள், காலணிகள் மற்றும் தோல் பொருட்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற வேலைவாய்ப்பு நிறைந்த துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள். அனைவரும் சேர்ந்து எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கனவை நனவாக்குவோம் வாருங்கள் என மனதார அழைப்பு விடுக்கிறேன். இந்த மாநாட்டினால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளரும். அதன்மூலம் இந்தியப் பொருளாதாரமும் உயரும். அன்புக்குரிய முதலீட்டாளர்களே, உலகத்தின் பல நாடுகளிலிருந்து, அமைதியில் சிறந்த, முதலீட்டாளர்களின் நண்பனாக திகழுகிற தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வந்து இருக்கிறீர்கள்.

என் தலைமையிலான தமிழ்நாடு அரசு, உங்களுக்கு அனைத்து வகையிலும், உறுதுணையாக இருக்கும். உங்களுடைய உணர்வுகளை மதிக்கும். தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்யும். ஏனென்றால், இது, “சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்” என்ற ஆட்சி நடத்துகின்ற திராவிட மாடல் அரசு. வாருங்கள்… முதலீடு செய்யுங்கள்… தமிழ்நாட்டின் முன்னேற்றத்திலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் உங்கள் பங்களிப்பை தாராளமாக வழங்குங்கள் என்று அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

* கோட் சூட் அணிந்து வந்தது ஏன்?
முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் நான் கோட்-சூட் போடுவது வழக்கம். ஆனால் இங்கு எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்குள் வந்து விட்டதால், இங்கே நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக உள்ளது. இன்று (நேற்று) காலையிலிருந்து சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நான் இங்கு வந்தவுடன், முதலீடும் மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது. தொழில் துறையில் மேன்மையும், தனித்த தொழில்வளமும் கொண்ட மாநிலம் தான், தமிழ்நாடு.

பண்டைய காலத்தில் இருந்து கடல் கடந்தும் வாணிபம் செய்தவர்கள். அதனால்தான், “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” – என்று தொழிலை ஊக்குவிக்கும் பழமொழி உருவானது. இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடு, முன்மாதிரி மாநிலம். 1920ம் ஆண்டு ‘தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு’ எனப்படும் தொழிலதிபர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. இதனால்தான், தமிழ்நாடு அனைத்து வகைத் தொழில்களிலும், முன்னேறிய மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற மாநிலமாக இருப்பதால், இதற்கான திறமையான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக கிடைத்தார்கள் என்றார்.

The post இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கும்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Chief Minister ,M. K. Stalin ,World Investors Conference ,Chennai ,M.K.Stalin ,World Investors Conference 2024 ,Chennai Trade Center ,M.K.Stal ,Global Investors Conference ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் நலன் முழுமையாக...