×

வேப்பூர் அருகே பரிதாபம் லாரி மீது கார் மோதி எஸ்ஐ உள்பட 3 பேர் பலி

வேப்பூர், டிச. 31: லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் சண்முகம் மகன் ராகவன்(54). இவர் சென்னை சைதாப்பேட்டையில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று தனது குடும்பத்துடன் காரில் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றார். காரை மதுரையை சேர்ந்த ஓட்டுநர் சரவணன் (45) என்பவர் ஓட்டி சென்றார். நேற்று மதியம் 12.15 மணியளவில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பாசார் பஸ் நிறுத்தம் அருகே கார் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற கனரக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராகவன், கார் ஓட்டுநர் சரவணன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி பாண்டீஸ்வரி (50), அவரது மகள் அக்‌ஷயா (22), மதுரையை சேர்ந்த உறவினர் ராஜேஷ் (51) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்‌. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார், படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு, வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் உயிரிழந்தார். பாண்டீஸ்வரி, அக்‌ஷயா ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த திட்டக்குடி டிஎஸ்பி காவ்யா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post வேப்பூர் அருகே பரிதாபம் லாரி மீது கார் மோதி எஸ்ஐ உள்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : SI ,Paritapam ,Veypur ,Chennai ,Shanmugam ,Raghavan ,Ashok Nagar, Chennai ,Saitappettai, Chennai ,
× RELATED பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது பைக்...