×

பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது பைக் மீது கார் மோதியதில் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் பலி

*2 வயது குழந்தை உயிர் தப்பியது *வேப்பூர் அருகே பரிதாபம்

வேப்பூர் : பைக் மீது கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் 2 வயது குழந்தை உயிர் தப்பியது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கொளவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராயப்பன் மகன் ராஜதுரை(29). இவரது மனைவி மதுமதி(25). இவர்களுக்கு புகழ் என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. மதுமதி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று காலை 9.45 மணி அளவில் ராஜதுரை, தனது கர்ப்பிணி மனைவி மதுமதியை கழுதூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக புகழுடன் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

சேலம் – விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏ.களத்தூர் கைகாட்டி அருகே வந்த போது, அந்த வழியாக பின்னால் வந்த கார் ராஜதுரை வந்த பைக் மீது பயங்கர வேகத்தில் மோதி‌ விபத்துக்குள்ளானது. இதில், பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட ராஜதுரை, மதுமதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் விபத்தில் குழந்தை புகழ் காயமடைந்தது.இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, இது குறித்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விபத்தில் காயமடைந்த குழந்தை புகழை மீட்டு, சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான கணவன், மனைவியின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், விபத்தை ஏற்படுத்திய கார் கர்நாடகா மாநிலத்தில் இருந்து திருநள்ளாறு நோக்கி சென்றது தெரிய வந்தது. மேலும் போலீசார் அந்த காரை பிடித்து, அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் மீது கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது பைக் மீது கார் மோதியதில் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் பலி appeared first on Dinakaran.

Tags : Paritapam Veypur ,Veypur ,
× RELATED பைக் மீது வேன் மோதி விபத்து மகன் பலி, தாய் படுகாயம்