புதுச்சேரி, டிச. 30: பிகார் லக்கிசரை பகுதியை சேர்ந்தவர் சோனிராம் (31). இவர், புதுச்சேரி சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். சம்பவத்தன்று இவர், சேதராப்பட்டு ஓட்டலுக்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அங்குள்ள தீயணைப்பு நிலையம் எதிரே சென்றபோது பின்னால் பைக்கில் வந்த 2 பேர், திடீரென சோனிராமின் செல்போனை பறித்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குபதிந்து தலைமறைவான 2 பேரையும் வலைவீசி தேடினர். இதனிடையே செல்போன் பறிப்பில் ஈடுபட்டது வானூர் மொரட்டாண்டியைச் சேர்ந்த கௌதம் (22) மற்றொருவர் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் நேற்று எஸ்ஐ ராஜேஷ் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் கௌதம் வெல்டிங் தொழிலாளி என்பதும், ஆரோவில்லில் இவர் மீது 307 வழக்கு நிலுவையில் இருப்பதும், தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருப்பதும், மற்றொருவரான சிறுவன் கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. கைதான 2 பேரிடமிருந்து பைக், ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
The post சேதராப்பட்டு அருகே தொழிலாளியிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவர், தொழிலாளி கைது appeared first on Dinakaran.