×

பீகார் அரசியலில் பரபரப்பு; 14 எம்எல்ஏக்களால் நிதிஷ் குமார் பதவிக்கு சிக்கல்: முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தும் லாலு மகன் தேஜஸ்வி


பாட்னா: பீகார் மாநில அரசியலில் 14 எம்எல்ஏக்களால் நிதிஷ்குமாரின் முதல்வர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி இரண்டாக உடையும் நிலையில் புதிதாக முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தும் வேலையில் லாலுவின் மகன் தேஜ்வி ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நிதிஷ்குமாருக்கும் லாலு பிரசாத் யாதவுக்கும் அவ்வப்போது கருத்து மோதல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இருவருமே மறுத்து வருகின்றனர். அதே நேரத்தில், நிதிஷ் குமார், மீண்டும் பாஜ கூட்டணிக்கு திரும்புவார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவார் எனவும் கூறப்பட்டு வருகிறது. டெல்லியில் நாளை ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தையும் நிதிஷ்குமார் கூட்டியுள்ளார்.

இந்நிலையில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர் ஒருவர் 11 எம்எல்ஏக்களுடன் ரகசிய ஆலோசனை கூட்டத்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷ் குமாருக்கு எதிராக இவர்கள் போர்க்கொடி தூக்க போவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நிதிஷ் குமார், தனது முதல்வர் பதவியை இழக்கும் நிலைமை உருவாகி உள்ளது. நிதிஷ்குமாரின் முதல்வர் பதவியை பறிப்பதில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சிதான் தீவிரம் காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 122 எம்எல்ஏக்கள் தேவை. தற்போது லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம்- 79, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்- 45, காங்கிரஸ் -19, இடதுசாரிகள்- 16, சுயேட்சை- 1, பாஜ – 78, ஹெச்ஏஎம்எஸ்-4. தற்போதைய நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு 115 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

பெரும்பான்மைக்கு தேவை 7 எம்எல்ஏக்கள். நிதிஷ் குமார் கட்சியின் 14 எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தாலோ கலக குரல் எழுப்பியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ பீகார் சட்டசபை பலம் 243ல் இருந்து 229ஆக குறையும். அப்போது பெரும்பான்மைக்கு தேவை 115 எம்எல்ஏக்களாக இருக்கும். இதனால் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு இல்லாமலேயே ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பீகார் புதிய முதல்வராக பதவியை கைப்பற்றவும் முடியும். இந்த வியூகத்துடன் தான் லாலு கட்சி களமாடுவதாக அம்மாநில தலைவர்கள் கூறுகின்றனர். இதனால் பாஜ எம்எல்ஏக்கள் யாரும் குதிரை பேரத்தில் சிக்கிவிட கூடாது என்பதற்காக அத்தனை பேரையும் உடனடியாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு அனுப்பும் நடவடிக்கையில் அக்கட்சி இறங்கிவிட்டது. இதனால் பீகாரில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

The post பீகார் அரசியலில் பரபரப்பு; 14 எம்எல்ஏக்களால் நிதிஷ் குமார் பதவிக்கு சிக்கல்: முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தும் லாலு மகன் தேஜஸ்வி appeared first on Dinakaran.

Tags : Bihar ,Nitish Kumar ,Lalu ,Tejasvi ,Kai ,Chief Minister ,Patna ,Tejvi ,Akhatsi ,
× RELATED பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி...