×

ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வருகை ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்ற வியூகங்களை வகுக்கும் காங்கிரஸ்: தேர்தலில் மக்களை கவர 10 உத்தரவாதம்

திருமலை: ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி வியூகங்களை வகுத்து வருகிறது. இதையொட்டி தேர்தலுக்கு முன்னதாக 3 பெரிய கூட்டங்களுக்கு ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தேர்தலில் மக்களை கவர 10 உத்தரவாதங்கள் அளிக்கப்பட உள்ளது. கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி உற்சாகத்துடன் இருக்கிறது. இந்நிலையில் மாநில பிரிவினையால் ஆட்சியை கைவிட்ட ஆந்திராவிலும், ஆட்சியை கைப்பற்ற வியூகங்களை வகுத்து வருகிறது. டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் இதற்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநில பிரிவினையின் போது அறிவிக்கப்பட்ட ஆந்திர மக்கள் பல ஆண்டுகளாக கேட்டு வரும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் வரும் தேர்தலுக்கான வாக்குறுதிகளை தயார் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்படி ஆந்திராவில் தேர்தல் வாக்குறுதியாக 10 உத்தரவாதங்களை அளிக்க திட்டமிட்டுள்ளனர். மறுபுறம், தேர்தல் பிரச்சாரத்திலும் கவனம் செலுத்தி உள்ளனர். இதற்காக ஆந்திராவில் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு 3 பெரிய பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்தக் கூட்டங்களுக்கு வருமாறு ராகுல் காந்தி, பிரியங்கா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு ஆந்திர தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான பிரசார வியூகம் தயார் செய்து வருகிறது.

முதல்வர் ஜெகன்மோகனை குறிவைத்து காங்கிரஸ் திட்டம் வகுத்து வருகிறது. ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு எதிரான செயல்களை மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிடப் பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தை கடனாளியாக மாற்றியது ஜெகனின் அரசு என ஆந்திர மாநில தலைவர் கிடுகு ருத்ரராஜ் தெரிவித்துள்ளார். ஒய்சிபி ஆட்சியில் மாநிலத்தின் வளர்ச்சி தேக்கமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் அரசின் தோல்விகளை மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஆந்திராவில் காங்கிரஸ் மேலிடம் பல முனை வியூகத்துடன் மக்களிடம் செல்ல திட்டமிட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின் 10 உத்தரவாதங்களை பொதுக்கூட்டங்கள் மூலம் அறிவித்து மக்களை கவர வியூகம் வகுத்து வருகிறது. அதே நேரத்தில் அரசை விமர்சித்து அரசுக்கு எதிரான வாக்குகளை காங்கிரஸ் பெறவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அரசியல் வட்டாரத்தில் இதுகுறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

The post ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வருகை ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்ற வியூகங்களை வகுக்கும் காங்கிரஸ்: தேர்தலில் மக்களை கவர 10 உத்தரவாதம் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Congress ,Andhra Pradesh ,Tirumala ,Congress party ,
× RELATED சொல்லிட்டாங்க…