நெல்லை: 4 மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக 325 சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நெல்லையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மழை வெள்ளத்தால் மருத்துவமனைகளுக்கு பெரிய பாதிப்பில்லை.
சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களில் 64 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 261 துணை சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்லையில் 13 சுகாதார நிலையங்கள், 13 துணை சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார நிலையங்களில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.
வெள்ள பாதிப்பு பகுதிகளில் மருத்துவ முகாம்கள்:
நாளை காலை 9 மணி முதல் 4 மணிவரை 50 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெறும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து தூத்துக்குடியில் இந்த முகாம்களை நடத்த உள்ளது. வெள்ளம் பாதித்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமாகவும் மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது. முதியவர்கள், நோயாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
The post 4 மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக 325 சுகாதார நிலையங்கள் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.