×

திட்ட இயக்குனர் மாற்றத்துக்கு எதிர்ப்பு பாகூரில் மக்கள் மறியல்; அரசு பேருந்து சிறைபிடிப்பு போக்குவரத்து பாதிப்பு

பாகூர். டிச. 23: அரியாங்குப்பம் பிடிஓ அலுவலகத்தில் திட்ட இயக்குனரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியே ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சேரி அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திட்ட இயக்குனராக சத்தியமூர்த்தி பணியாற்றி வந்தார். இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக சமீபத்தில் சத்தியமூர்த்தியை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. ஆனால் அவரை மாற்றக்கூடாது என்று அவருக்கு ஆதரவாக சிலர் துண்டுபிரசுரங்கள் மற்றும் போஸ்டர் அடித்து ஒட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பாகூர் பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் சத்தியமூர்த்தியின் ஆதரவாளர்கள் சிலர் பாகூர் தூக்குப்பாலத்தில் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியே வந்த அரசு பேருந்தையும் சிறைபிடித்தனர். இதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலக இளநிலைப் பொறியாளர் சிவப்பிரகாசம் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் பொதுமக்கள், திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தியை இடமாற்றம் செய்யக்கூடாது, தொடர்ந்து 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தொடர்ந்து உங்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், திட்ட இயக்குனர் மாற்றல் விவகாரம் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அவ்வழியே சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post திட்ட இயக்குனர் மாற்றத்துக்கு எதிர்ப்பு பாகூரில் மக்கள் மறியல்; அரசு பேருந்து சிறைபிடிப்பு போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Bagoor ,Arianguppam PTO ,Bagur ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்