கூடலூர்,டிச. 22: கூடலூர் நகராட்சியில் 2வது கட்டமாக 4, 5, 6, 7 மற்றும் 18 வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமானது மார்த்தோமா நகர் செயின்ட் தாமஸ் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூடலூர் ஆர்டிஓ குதிரத்துல்லா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் பிரான்சிஸ் சேவியர், நகர்மன்ற தலைவர் பரிமளா, கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் சத்தியசீலன், ராஜு, வர்கீஸ், உஷா, மும்தாஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இதே போல் நடுவட்டம் பேரூராட்சியில் நடுவட்டம் பஞ்சாயத்து காலனி சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார். இதில் மின் இணைப்பு பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு, பட்டா, விதவை பென்ஷன், மகளிர் உரிமைத்தொகை, தையல் இயந்திரம், தாட்கோ கடன், முதல்வர் காப்பீட்டு திட்டம், வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 895 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் பேரூராட்சி தலைவர் கலியமூர்த்தி, துணை தலைவர் துளசி, செயல் அலுவலர் பிரதீப் குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post கூடலூர், நடுவட்டம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 1,895 பேர் மனு appeared first on Dinakaran.