டெல்லி : அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்த எம்.பி.யின் பெயரை கூற சபாநாயகர் மறுப்பதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அத்துமீறி இளைஞர்கள் 2 பேர் நுழைந்து முழக்க மிட்டனர். மேலும், வண்ண குண்டுகளையும் வீசினர். இதேபோல் நாடாளுமன்றத்தின் வெளிப்பகுதியில் பெண் உள்பட 2 பேரும் கோஷமிட்டனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இத்தகைய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் பேசியது பின்வருமாறு,”நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறலை மூடி மறைக்க சபாநாயகர் முயற்சி செய்கிறார். நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்க மறுக்கின்றனர். அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்த எம்.பி.யின் பெயரை கூற சபாநாயகர் மறுக்கிறார்.நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியாளார்களுக்கான 125 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 301 பேரில் 176 பேர்தான் பணியில் உள்ளனர்.பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அலுவலகங்கள், பிரதமர் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து கொடுத்த நோட்டீஸை காற்றில் பறக்கவிட்டனர் நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும். எம்.பி.க்கள் பாதுகாப்பே இல்லாமல்தான் அவையில் உள்ளனர்.அனைத்து வேலைகளையும் அவசர அவசரமாக செய்வதால்தான் தவறுகள் நடக்கின்றன.நெறிமுறை குழு விசாரணையின்போது பேசவே அனுமதிக்காமல் மகுவாவை அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்துவிட்டனர்.அவைக்குள் அத்துமீறி நுழைந்து கலர் புகையை பரப்பியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையே அவைக்கு தெரிவிக்கவில்லை,”என்றார்.
The post அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்த எம்.பி.யின் பெயரை கூற சபாநாயகர் மறுப்பு : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு காட்டம் appeared first on Dinakaran.