×

ஆம்பூர் நெடுஞ்சாலையில் தொடர் விபத்து; பூசணி, எலுமிச்சை உடைத்து நடுரோட்டில் சிறப்பு பூஜை: வைரல் வீடியோ

ஆம்பூர்: ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஏற்படும் விபத்துகள் தடுக்க பூசணி, எலுமிச்சை உடைத்து நடுரோட்டில் ஒருவர் சிறப்பு பூஜை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி விபத்துகள் தொடர் கதையாகி வருகிறது. விபத்துகளை தடுக்க ஆம்பூரில் தற்போது உயர்மட்ட அதிநவீன மேம்பால பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

விபத்துகளை தடுக்க ஆம்பூர் ராஜிவ்காந்தி சிலை சந்திப்பு, பஸ் நிலையம், ரயில் நிலையம், ஓஏஆர் சிக்னல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார், போலீஸ் நண்பர்கள் குழுவினர் மற்றும் ஊர்க்காவலர் படையினர் உள்ளிட்டோர் போக்குவரத்தை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தினசரி ஒரு சிறு விபத்தாவது நடந்து விடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முதல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அமாவாசை தினமான நேற்று ஆம்பூர் ராஜிவ்காந்தி சிலை சிக்னல் அருகே காக்கி உடையில் ஒருவர் சாலையோரம் பூஜை செய்துள்ளார்.

அந்த நபர் கற்பூரம் ஏற்றி வைத்துவிட்டு பூசணிக்காய், எலுமிச்சை ஆகியவற்றை சாலையின் நடுவே பேரிகார்டு உள்ள பகுதியில் சுற்றி சாலையில் உடைக்கிறார். இந்த காட்சி வைரலாகி வருகிறது. அந்த நபர், போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர் என்றும், ஆம்பூரில் தினசரி ஏற்படும் விபத்தை தடுக்க அமாவாசையையொட்டி பூசணி, எலுமிச்சை ஆகியவற்றை உடைத்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.

The post ஆம்பூர் நெடுஞ்சாலையில் தொடர் விபத்து; பூசணி, எலுமிச்சை உடைத்து நடுரோட்டில் சிறப்பு பூஜை: வைரல் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Ambur highway ,Ambur ,Ambur National Highway ,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...